'நளினி' தலைமைக்கு எதிர்ப்பு... சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு டிச.13-ல் மீண்டும் தேர்தல்!
சென்னை: சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு டிசம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். தலைவராக இருந்த ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து 2014-2017ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. 1,300 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில், 700க்கு மேற்பட்ட நடிகர், நடிகைகள் வாக்களித்தனர்.
இதில் நளினி வெற்றி பெற்று தலைவியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். இந்தச் சங்கத்துக்கு தேர்தல் நடந்து இன்னும் ஒரு ஆண்டு கூட முடிவடையாத நிலையில் மீண்டும் தேர்தல் வருவதற்கு தலைவி நளினியே காரணம் என்கின்றனர்.
நடிகர் சங்கத் தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள... சின்னத்திரை நடிகர் சங்கத்தில் இரண்டு கோஷ்டிகள் உருவானது.
நளினி நடிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார். சங்க பிரச்னைகளுக்கு முக்கியத்தும் தருவதில்லை என்றும், தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவியான நளினிக்கு, எதிர்ப்பு வலுக்கவே, அவரது நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த சங்கத்தின் பொருளாளர் வி.டி.தினகர், துணைத் தலைவர் ராஜ்காந்த், இணை செயலாளர்கள் பாபூஸ், கன்யா பாரதி, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
அனைத்து சங்க நிர்வாகிகளும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா பண்ணவே. சங்க நிர்வாகமே ஸ்தம்பித்து வேற வழியில்லாமல் நளினியும் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று புதன்கிழமை காலைல விருகம்பாக்கம் கோல்டன் பாரடைஸ் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு டிசம்பர் 13ம் தேதி மீண்டும் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தலைமை சரியில்லாத காரணத்தால் தேர்தல் நடந்து ஒரு ஆண்டிலேயே மறு தேர்தல் நடத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளது சின்னத்திரை நடிகர் சங்கம். இந்தமுறையாவது சரியான தலைமையைத் தேர்வு செய்வார்களா என்பது டிவி ரசிகர்களின் கேள்வியாகும்.