தூத்துக்குடி அனல் மின் நிலைய 3வது யூனிட்டில் மீ்ண்டும் பழுது
தூத்துக்குடி அனல் மின் நிலையம் தொடங்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாகிறது. இங்கு தலா 210 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன.
முதல் 3 யூனிட்டுகள் மிகவும் பழமையானவை. இவை 30 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருவதால் தென் மாநிலங்களின் மின் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்கின்றன. இங்கு அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால் இவற்றை பராமரிக்க ரூ.224 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
3வது யூனிட்டானது 10 மாதம் இடைவெளியில் 3 முறை அடுத்தடுத்து பழுதடைந்தது. பின்னர் பழுது நீக்கப்பட்டு உற்பத்தி துவங்கியது. இந்நிலையில் மீண்டும் 3வது யூனிட்டில் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது. மின் உற்பத்தி பாதிப்பால் கூடுதலாக 6 மணி நேரம் மின் வெட்டு அதிகரித்துள்ளது.
புதிய அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் அனல் மின் நிலையங்களை உடனடியாக பழுது பார்த்து சீரமைத்தால் மின்தடையை ஓரளவுக்கு சமாளிக்கலாம் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.