என்ன சகுனமோ.. விஜயதசமி நாளில் தமிழக தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்த பாம்பு!
சென்னை: தமிழக தலைமைச் செயலகத்துக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதை தீயணைப்பு வீரர்கள் போராடி பிடித்தனர்.
சென்னையிலுள்ள தமிழக தலைமைச் செயலகத்தில் கடந்த வாரம் திங்கள்கிழமை காலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்த வாரம் சனிக்கிழமை அப்போதைய முதல்வரான ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறப்பட இருந்ததால், தீ பிடித்தது அபச குணமாக பார்க்கப்பட்டது. அதேபோன்று முதல்வருக்கு எதிராக தீர்ப்பு வெளியானது.

இந்நிலையில், இன்று விஜயதசமி நாளில், தலைமைச் செயலகத்திற்குள் பாம்பு புகுந்துள்ளது. பாதுகாப்பு போலீசார், பாம்பு ஒன்று அதிவேகமாக செல்வதை பார்த்துள்ளனர். நாமக்கல் கவிஞர் மாளிகையின் 6வது மாடிக்குள் அந்த பாம்பு சென்றுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு போலீசார் தகவல் அளித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த சாரைப்பாம்பு பிடிபட்டது. அதை பிடித்து வனத்துறை ஊழியர்களிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.
தலைமைச் செயலகத்தில் பாம்பு நுழைந்துள்ளது நல்ல சகுணமா, கெட்ட சகுணமா என்ற ஆய்வில் இறங்கியுள்ளனர், அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications