சோதித்த கடவுளிடமே நியாயம் கேட்கப் போகிறேன்.. மகனுடன் தற்கொலை செய்த பெண் சாப்ட்வேர் என்ஜீனியர்!
சென்னை: என்னை சோதித்த கடவுளிடமே, ஏன் என்னை இப்படி சோதித்தாய் என்று நியாயம் கேட்கப் போகிறேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் புழல் ஏரியில் குதித்துத் தற்கொலை செய்துள்ளார். சாவதற்கு முன்பு தனது 5 வயது மகனையும் ஏரியில் வீசி கொன்றுள்ளார் அந்தப் பரிதாபப் பெண்.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் 33 வயதான நித்யா. இவரது தந்தை ஓய்வு பெற்ற தபால் துறை அதிகாரி. நித்யா, சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் ரமேஷ் பாபு என்பவருக்கும் 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஸ்ரீஜித் என்ற மகனும் பிறந்தான். ஆனால் அதன் பின்னர் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர்.
தனது மகனுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார் நித்யா. இந்த நிலையில், நேற்று 6 வயதான தனது மகனுடன் ஸ்கூட்டியில் புழல் ஏரிக்கு வந்தார் நித்யா. வண்டியை நிறுத்தி விட்டு மகனைப் பிடித்து ஏரியில் வீசி விட்டார். பின்னர் தானும் ஏரியில் குதித்து விட்டார். இதைப் பார்த்தோர் அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் ஏரியில் குதித்துத் தேடியபோது சிறுவனின் உடல் மட்டும் கிடைத்தது. நித்யாவின் உடல் கிடைக்கவில்லை. நித்யாவின் ஸ்கூட்டியில் போலீஸார் சோதனை நடத்தியபோது ஒரு கடிதம் கிடைத்தது. அதில், "எனது வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள். ஆகவே அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகினேன். மனஉளைச்சல் கொடுத்த கடவுளிடம் சென்று கேட்கப் போகிறேன். மகனை விட்டுச்சென்றால் கஷ்டப்படுவான் என்பதால் அவனையும் அழைத்துச்செல்கிறேன் என்று எழுதி வைத்துள்ளார் நித்யா.