இருண்டு கிடக்கும் மீனவ கிராமங்கள்.. அதிகரிக்கும் வழிப்பறி.. நாகை அருகே மக்கள் பீதி!
நாகப்பட்டினம் அருகே இருண்டு கிடக்கும் மீனவ கிராமங்களில் நடக்கும் வழிப்பறி கொள்ளைகளால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தில் இருண்டு கிடக்கும் மீனவ கிராமங்களில் நடக்கும் வழிப்பறி கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் இரவு வேளையை அச்சத்துடனே கழித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில், காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, கீழகாசாகுடிமேடு, கோட்டுச்சேரிமேடு, மண்பத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும், தனியார் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் 10க்கும் மேற்பட்ட ஆரம்பம், நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளும் இந்தப் பகுதிகளில் இயங்கி வருகின்றன.
அனைத்து மீனவ கிராமங்களிலும் தெரு விளக்குகள் தொடர்ந்தாற்போல் எரிவதில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக, காரைக்கால் பைபாஸ் சாலை முதல் கோட்டுச்சேரி மேடு வரை ஒரு சில மின் விளக்குகள் எரிவதுடன் சரி, கோட்டுச்சேரி மேடு முதல் மண்டபத்தூர் வரை 7 மீனவ கிராமங்களும், 3 தனியார் கல்லூரி மற்றும் அரசு பள்ளிகளுக்கு, ஒரு அரசு விலையாட்டுத் திடலுக்கும் ஒரே பிரதான சாலைதான்.
இந்த சாலையிலிருந்து ஏராளமான கிராமங்களின் கிளைச் சாலைகள் பிரிகிறது. இரவு நேரமானால், வீட்டு விளக்குகளை தவிர பெரும்பாலுமான வீதிகளிலும், பிரதான சாலைகளிலும் மின்கம்பங்கள் எரிவதில்லை. இதன் காரணமாக மீனவர்களும், கல்லூரி மாணவ, மானவிகளும் இருட்டில் சொல்லமுடியாத துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலையில் கணக்கில்லாமல் நடமாடும் ஆடு, மாடு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளால் இருட்டில் தினசரி விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.