ஈஸிசேரில் படுத்துக் கொண்டு இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தா.. "ஆஹா".. அது ஒரு காலமய்யா!
சென்னை: கனவு காணுங்கள் என்று கலாம் சொன்னார். அது எதிர்காலம் பிரகாசமாக இருப்பதற்காக... ஆனால் நாம் கடந்து போய் விட்ட பல அருமையான தருணங்களை இனி எத்தனை முறை கனவு கண்டாலும் நிஜத்தில் அதைக் காண முடியாது.
இப்படி நாம் மறந்து போய் விட்ட, கடந்து வந்து விட்ட பல அருமையான விஷயங்களை யாரோ ஒருவர் ஈஸிசேரில் படுத்துக் கொண்டு நினைத்துப் பார்த்து வாட்ஸ் ஆப்பில் தட்டி விட்டுள்ளார்.
காலம் கடந்து போன பின்னரும் எல்லோர் நினைவிலும் நீங்காமல் நிற்கும் நினைவுகள் இவை. மீண்டும் திரும்பிச் செல்ல ஏங்கும் காலகட்டத்தின் அரிய பொக்கிஷங்கள்.
டிவி முன்னர் தவம்:
வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் ஊரே அமர்ந்து பார்த்தோம். ஞாயிற்றுக்கிழமை மாநிலமொழி திரைப்படம் தமிழில் போடமாட்டார்களா என ஏங்கி கிடந்தோம்.
அடிக்கடி செத்துப் போன பாட்டி, தாத்தா:
திங்கள்கிழமை பள்ளியில் அமர்ந்து கொண்டு ஞாயிறன்று பார்த்த படத்தைப்பற்றி விவாதம் செய்தோம். தாத்தாவையும், பாட்டியையும் ஸ்கூல் லீவு போட அடிக்கடி சாகடித்தோம்.
ஒரு ரூபாயும், ஒரு நாளும்:
முழு ஆண்டு விடுமுறையில் மாமா, பெரியப்பா, பாட்டி வீட்டுக்கு டூர் போனோம். ஒரே ஒரு ரூபாயைக் கையில் வைத்துக்கொண்டு அன்று முழுவதும் செலவு செய்தோம். பாட்டி கையால் கற்சட்டி உருண்டை சோறு சாப்பிட்டோம்.
அனைவர் வீட்டிலும் உண்டியல்:
100 ரூபாய் நோட்டை ஆச்சரியத்துடன் கையில் வாங்கி பெருமூச்சு விட்டோம். அனைவர் வீட்டிலும் உண்டியல் இருந்தது. பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக நின்றுகொண்டே, அந்த வீட்டு டிவியில் ஓடும் படம் முழுவதையும் பார்த்து ரசித்தோம்.
ஹார்லிக்ஸ் பாட்டில் மீன்கள்:
பீரோக்கள் முழுவதும் சக்திமான் ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து அழகு பார்த்தோம். ஹார்லிக்ஸ் பாட்டில்களில் மீன்களை வளர்த்தோம். பொங்கலுக்கும் தீபாவளிக்கும், புத்தாண்டுக்கும் கிரீட்டிங் கார்டு வாங்க குவிந்து நின்று தேர்வு செய்தோம்.
மாலை முரசுக்கு தவம்:
10 ஆவது, 12 ஆவது ரிசல்ட் பார்க்க மாலை முரசு பேப்பருக்காக தவம் கிடந்தோம். 15 வயது வரை டவுசர்களையே அணிந்திருந்தோம். பழைய மாடல் கேசட்களில் பிலிம் சிக்கிக்கொண்டால் ரெனால்ட்ஸ் பேனாவால் உள்ளே விட்டு சுத்தி, சுத்தி அட்ஜஸ்ட் செய்தோம்.
கலக்கிய நதியா மாடல் சடை:
கன்னிப்பெண்கள் அனைவருமே நதியா மாடல் சடை, கொண்டை, வளையல், கொலுசு போட்டு அழகுபார்த்தார்கள். பணக்கார வீட்டு பெண்கள் BSA SLR சைக்கிளில் பேஷனாக வலம் வந்தார்கள்.
மயிலிறகும் குட்டி போடும்:
ஜாமென்ட்ரி பாக்ஸில் காசுகளையும் மிட்டாய்களையும் போட்டு வைத்தோம்.புத்தகத்திற்குள் மயிலிறகைப் போட்டு வைத்து குட்டி போடுமா என்று பார்த்துப் பார்த்து ரசித்தோம்.
கரண்ட் வந்தால் ஆரவாரம்:
தெருவில் இறங்கி கிட்டிப்புல் விளையாடினோம், கபடி ஆடினோம். நம் ஊரில் TVS-50 & Bullet வைத்திருந்தவர்கள் பணக்காரர்களாக இருந்தார்கள். கட்டான கரண்ட் மீண்டும் வந்ததும் மகிழ்ச்சியில் கத்தி ஆராவரப்படுத்தினோம். எல்லாமே கனவாய் போய் கனவு கலைந்து எழுந்து காத்திருக்கிறோம் காலம் மீண்டும் வரும் என்று!












Click it and Unblock the Notifications