ஓபிஎஸ் பின்னாடி "ஆரோ" டப்பிங் கொடுக்கறாங்கோ... தெனாலி மாதிரி பேசும் தம்பித்துரை!
சிலரின் தூண்டுதலின் பெயரிலேயே ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை: சிலரின் தூண்டுதலின் பெயரிலேயே ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து இருந்து பிரிந்து சென்ற பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் திரும்ப வந்தால் அவர்களை ஏற்க தயாராக உள்ளோம் என்றும் தம்பிதுரை கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என ஓபிஎஸ் தரப்பினர் தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதுதொடர்பான விசாரணையில் இருதரப்பும் விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு அதிமுகவினரும், சசிகலா தரப்பு அதிமுகவினரும் டெல்லியில் முகாமிட்டு தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தனர். சசிகலா நியமனம் செல்லுமா என்பது குறித்து 20ஆம் தேதிக்குள் முடிவு தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை
இந்நிலையில் சசிகலா தரப்பில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையிலான குழுவினர், நசீம் ஜைதியை நேற்று சந்தித்தனர். சந்திப்புக்கு பின், தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசினார்.
சிலரின் தூண்டுதல்
அப்போது பன்னீர்செல்வத்தை, பா.ஜ., இயக்குகிறதா அல்லது வேறு யாராவது இயக்குகின்றனரா என்பது எனக்கு தெரியவில்லை என்றார். ஆனால், யாரோ சிலரின் துாண்டுதலிலேயே, ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு செயல்படுகிறார் என்றும் தம்பிதுரை குற்றம்சாட்டினார்.
திரும்ப வந்தால் ஏற்போம்
கட்சியில் இருந்து பிரிந்து சென்ற, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் திரும்ப வரவேண்டும் என்றும், திரும்ப வந்தால், அவர்களை ஏற்க தயாராக உள்ளோம் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.
விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல்
தற்போது, சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கிறது. அதன்பின், கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு, பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தம்பிதுரை கூறினார்.
சசிகலா தரப்புக்கு பின்னடைவு?
தம்பிதுரை திடீரென மற்றவர்கள் மீது குற்றம்சாட்டுவதும், ஓபிஎஸை ஏற்க தயாராக இருப்பதாக கூறுவதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுச்செயலாளர் விவகாரத்தில் சசிகலா தரப்புக்கு பின்னடைவு ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக தம்பிதுரை இவ்வாறு பேசுகிறாரா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.