சதிச்செயல்கள் மூலம் என்னை சிக்கவைக்க முடியாது : தீபாவின் கணவர் மாதவன் ஆவேசம்
சதிச்செயல்களின் மூலம் தன்னை தடுத்துநிறுத்தி விடமுடியாது என்று ஜெ.தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : தன்னை ஏதாவது சிக்கலில் சிக்கவைக்க சிலர் தொடர்ந்து முயற்சித்து வருவதாக சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனைச் சந்தித்த பின்பு ஜெ.தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் நிறுவனருமான ஜெ.தீபாவின் இல்லத்தில் தன்னை வருமான வரித்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திகொண்ட போலி நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
அப்போது வெளியான வீடியோ ஒன்றில் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் தான் தன்னை தீபாவிடம் இருந்து பணம் பறிக்க அனுப்பி வைத்ததாகவும், அதற்கான போலி ஆவணங்களையும் அவர் தான் தயார் செய்து கொடுத்ததாகவும் போலீஸில் தெரிவித்தார்.

ஆணையருடன் சந்திப்பு
இதனையடுத்து மாதவனைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், மாதவனுக்கும் இதில் தொடர்பு இல்லை என்பதை போலீஸார் விசாரணையில் கண்டுபிடித்தனர். இந்நிலையில், ஜெ.தீபாவின் கணவர் நேற்று சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனைச் சந்தித்தார். அதன் பின்பு அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

முழுமையான விசாரணை தேவை
அப்போது, எங்கள் வீட்டில் போலி அதிகாரியாக நடித்து பணம் பறிக்க முயன்ற நபரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. அந்த நபருக்கு என் மீது என்ன காழ்ப்புணர்ச்சி என்பது தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அவர் தற்போது உண்மையை கூறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அவர் ஏன் அப்படி கூறினார், அவரை யார் அனுப்பினார்கள் என்று காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று மாதவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊடகங்களில் தவறான செய்தி
மேலும், எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதனால் எனக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதற்காக நன்றி தெரிவிக்கவே நான் காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்தேன். ஆனால், தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் மீண்டும் மீண்டும் என்னை தவறாக சித்தரிப்பது வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது என்று தெரிவித்தார்.

நான் தலைமறைவாகவில்லை
மேலும், நான் எங்கும் தலைமறைவாகவில்லை. என்னை ஏதாவது ஒரு விஷயத்தில் சிக்க வைக்கப் பலர் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். இதிலும் அதுபோன்று எதுவும் நடந்திருக்கலாம் என்றே நான் சந்தேகிக்கிறேன். ஆனால் இதுபோன்ற சதிகளின் மூலம் என் செயல்பாட்டைத் தடுத்துவிட முடியாது என்று மாதவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications