சரக்கு அடிக்க பணம் தராத அப்பா.. வெட்டியே கொன்ற மகன்.. புதுக்கோட்டை அருகே பயங்கரம்
மது அருந்த பணம் தராத தந்தையை வெட்டி கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை: மது அருந்த பணம் தராத பெற்ற தந்தையை வெட்டியே கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கந்தர்வக்கோட்டை அருகே உள்ள ஊர் பெருங்களூர். இந்த பகுதியை சேர்ந்த விவசாயி சேகர். இவருக்கு வயது 50. மணிகண்டன், அருண் என்ற 2 மகன்கள் உள்ளனர். 27 வயதுடைய இந்த அருண் எந்த வேலை வெட்டிக்கும் போவதில்லையாம். இதில் தினமும் தண்ணியடித்துவிட்டு ஊர் சுற்றி வருவதுதான் இவரது அன்றாட வேலையாம். தண்ணி அடிப்பதற்காக கேட்கும்போதே பணத்தை கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் அன்று வீட்டில் கச்சேரிதான்.

நல்லது ஏறுமா காதில்?
கேவலமான வார்த்தைகளால் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு விடுவாராம். முக்கியமாக குடிக்க பணம் கேட்பது அவரது தந்தை சேகரிடம்தானாம். தன் மகன் இப்படி குடித்து வீணாகி கொண்டிருக்கிறானே என வருத்தப்பட்டு அவ்வப்போது கூப்பிட்டு கண்டிப்பாராம். வளர்ந்துவிட்ட பிள்ளையை அடிக்ககூட மனமில்லாமல், வேலைக்கு போகும்படி புத்திமதி மட்டும் சொல்வாராம். இதுபோல பொறுப்பில்லாத பிள்ளைகளுக்கு நல்லதெல்லாம்தான் காதில் ஏறாதே?

அரிவாளால் வெட்டி சாய்ப்பு
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் அருண், தன் தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டார். ஆனால் அவர் மறுக்கவும் ஆத்திரம் அடைந்த சேகர், அருகில் இருந்த அரிவாளை எடுத்து பெற்ற தகப்பன் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக வெட்டினார். இதில் நிலைகுலைந்த தந்தை சேகர், அங்கேயே சுருண்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தையை அரிவாளால் வெட்டிய தன் உடன்பிறந்த தம்பி மீது சேகரின் மூத்த மகன் மணிகண்டன் கந்தர்வகோட்டையில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்கினை பதிவு செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறக்கவே முடியாத "தினேஷ்"
சமீபத்தில், தனது தந்தை மது அருந்துவதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாமல், நீட் தேர்வுக்கு படித்து கொண்டிருந்த தினேஷ் என்னும் 16 வயது தூக்கிட்டு தற்கொலையே செய்துகொண்டான். மேலும் ஆவியாக வந்தாவது மதுக்கடைகளை ஒழிப்பேன் என்றும் அரசுக்கு கடிதமும் எழுதிவைத்து தன் வாழ்வை முடித்துகொண்டான். தினேஷ் போன்ற மகன்கள் இருக்கும் இதே தமிழகத்தில்தான் மது அருந்த பணம் கொடுக்காமல் தந்தையையே கொலை செய்த அருண் போன்ற மகன்களும் நடமாடி வருகிறார்கள்.

இன்னும் எத்தனை உயிர்களோ?
ஆக மொத்தம் மது காரணமாக மகனோ அல்லது தந்தையோ பலியாகும் நிலை இன்று கூடி வருகிறது. மது விற்பனை மூலம் அரசாங்கத்தின் பண வெறிக்கு இன்னும் எத்தனை உயிர்கள் காவு வாங்கப்படுமோ தெரியவில்லை. எத்தனை குடும்பங்கள் நாசமாக போகிறதோ? தெரியவில்லை. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கும் அவைகளை நடத்தும் அரசாங்கத்திற்கும் பொதுமக்களின் சாபங்களும் வயிற்றெரிச்சல்களும் மட்டும் கூடிக்கொண்டே போகின்றன.












Click it and Unblock the Notifications