இந்து கோவில்கள், கடவுள்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. கிறிஸ்தவ போதகர் மீது போலீஸ் வழக்கு
கோவை: இந்து கடவுள்களை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் பரப்பியதாக கிறிஸ்தவ மதபோதகர் மீது மோகன் சி லாசரஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் ஜெய்கிந்தமுருகேசன் என்பவர் சூலூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

சாத்தான்கள்
அந்த புகார் மனுவில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு கிறிஸ்தவ நிகழ்ச்சியில் மோகன் சி லாசரஸ் கலந்து கொண்டு பேசியபோது, "ஹிந்து கடவுள்களை சாத்தான்கள், ஹிந்து ஆலயங்களை சாத்தான்களின் அரண்கள் என்று பேசியுள்ளார். இந்தியாவிலேயே அதிகமாக சாத்தான்களின் அரண்கள் உள்ள இடம் தமிழகம்தான் என்றும் சொல்லி இருக்கிறார்.

நடவடிக்கை வேண்டும்
குறிப்பாக கும்பகோணம் பகுதியில் அத்தனை கோயில்களிலும் சாத்தான் அதிகமாக இருப்பதாகவும், ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளான யாகங்கள் வேள்விகளை கேலிசெய்யும் விதமாகவும் அவர் கூறியதுடன், இது தொடர்பான வீடியோக்களையும் சமூகவலைளதங்களிலும் பதிவிட்டு வருகிறார். எனவே இந்துமத கோவில்களையும் இழிவாகவும் தரக்குறைவாகவும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் பேசி வரும் மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

வைரல் வீடியோ
இதேபோல, கோவை கருமத்தம்பட்டி மற்றும் வி.எச்.பி சார்பிலும் பொள்ளாச்சி காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. மேலும் மோகன் சி லாசரஸ் பேச்சுக்கள் அடங்கிய வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தனிப்படை அமைப்பு
இந்நிலையில், இந்த புகார்களின் அடிப்படையில் மோகன் சி லாசரஸ் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சூலூர் எஸ்ஐ தங்கராஜ் மதபோதகர் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின்கீழ் பதிவு செய்துள்ளதுடன், இது சம்பந்தமாகவும் விசாரணை நடத்தி வருகிறார். இது மட்டுமல்லாமல் மோகன் சி லாசரஸை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications