கூட்டம் குறைவான ரயில் நிலையங்கள்... கல்யாணம் நடத்தி கல்லா கட்ட புதிய திட்டம்!
விரைவில் ரயில் நிலையங்களில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ரயில்வேத்துறை ஆலோசித்து வருகிறது.
சென்னை : இந்தியாவில் விரைவில் பிரபல ரயில் நிலையங்களில் திருமணம் உள்ளிட்ட வைபவ நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்கும் புதிய திட்டம் குறித்து ரயில்வே ஆலோசித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியன் ரயில்வேயில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ரயில் நிலையப் பகுதிகளைக் கொண்டு வருமானம் ஈட்டும் புதிய திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது.
லோக்சபாவில் கடந்த புதனன்று கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ரயில்வேத்துறை அமைச்சர் திருமணம் உள்ளிட்ட வைபவ நிகழ்ச்சிகளை ரயில் நிலையங்களின் ஒரு பகுதியில் நடத்த வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் ஈட்ட முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்தத் தகவல் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு இது குறித்து ஆலோசனைகள் வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தெந்த ரயில் நிலையத்தை இந்த திட்டத்திற்காக பயன்படுத்துவது, ரயில் நிலையத்தின் எந்தப் பகுதியை வாடகைக்கு ஒதுக்குவது உள்ளிட்ட விவரங்களைக் கோரியுள்ளது அமைச்சகம்.
வருவாயை பெருக்க வழி
ரயில் நிலையங்களில் பெரிதும் பயன்படுத்தப்படாத பகுதிகளை திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டலாம் என்பதே ரயில்வே அமைச்சகத்தின் திட்டம். வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில் ரயில்வே துறை இந்த திட்டத்தை அமல்செய்ய உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
பயன்படுத்தாத பகுதிகள்
மக்களின் இடம்பெயர்வு வாழ்க்கை முறை அதிகரித்து வரும் நிலையில் ரயில்வே சேவையை அனைவரும் பயன்படுத்த கட்டணத்தை உயர்த்த முடியாத சூழல் உள்ளது. எனினும் வருவாயை பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் தாமாக மக்கள் பயன்பாடு குறைவான ரயில் நிலையங்களை வெளிநாடுகளைப் போல சுபநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில்
கிராமப்புறங்களில் சில ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்டவை உள்ளன. இது போன்று பயன்படுத்தப்படாமல் இருக்கும் ரயில்நிலையங்களை வைத்து முதற்கட்டமாக இந்தத் திட்டம் தொடங்கலாம் என்று ஆலோசிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னையில் எந்த ஸ்டேஷன்?
சென்னையை பொறுத்தவரை மெரினா கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தில் சில பகுதிகள் இதற்காக ஒதுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தடத்தில் காலியாக உள்ள ரயில்வே இடங்கள் சுப நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.