ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள்- தென் மாவட்ட ரயில்கள் 3 மணி நேரம் தாமதம்!
திருச்சி: திருச்சியில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்ததையடுத்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருகின்ற அனைத்து ரயில்களும் 3 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன.
திருச்சி ரயில் நிலையத்தில் நேற்றிரவு ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்தன. பயணிகள் கூச்சல் போட்டதையடுத்து எஞ்சின் டிரைவர் உஷாராகி ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனால் தென் மாவட்டத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரக்கூடிய அனைத்து ரயில்களும் திருச்சி ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டன. சிக்னல் மற்றும் பாயிண்ட் கோளாறால் ஏற்பட்ட விபத்து காரணமாக 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த ரயில்கள் வழியில் நின்றன.
அதிகாலை 1.30 மணிக்கு பின்னர் ரயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு வந்தன.
இதனால் நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், பொதிகை உள்ளிட்ட அனைத்து ரயில்களும் இன்று தாமதமாக வந்து சேர்ந்தன. மலைக்கோட்டை மங்களூர், பாண்டியன் எக்ஸ்பிரஸ்கள் மட்டுமே வழக்கமான நேரத்திற்கு எழும்பூருக்கு வந்தன. மற்ற ரயில்கள் அனைத்தும் காலை 9.30 மணிக்கு மேல் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள்.
பயணிகள் மேலும்கடும் குளிரில் அவதிப்பட்டனர். அனந்தபுரி, ராமேஸ்வரம் ரயில்கள் 11 மணிக்கும், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் பகல் 1 மணி அளவிலும் வந்தன. தென் மாவட்ட ரயில்கள் மிகவும் தாமதமாக வந்து சேர்ந்ததால் எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளை அழைத்து செல்ல வந்த உறவினர்களும் காத்து கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.