தென் தமிழகத்துக்கு கன மழை... சென்னையில் மிதமான மழை... தமிழ்நாடு வெதர்மேன் Exclusive
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் தமிழகத்துக்கு கனமழை, சென்னைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: தென் தமிழகத்தில் நல்ல கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னையில் மிதமான மழையே இருக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் உறுதியாக கூறியுள்ளார்.
தென் தமிழக பகுதிகளான தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, கடலூர் நாகை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொருத்த மட்டில் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்துகிறது. இந்த மழை மேலும் இரு நாள்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறுகையில், ஏற்கெனவே இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் சென்றுவிட்டன. தற்போது ஏற்பட்டுள்ளது 3-ஆவது காற்றழுத்த தாழ்வு பகுதியாகும். இது இலங்கைக்கு கீழ் லட்சத்தீவுகள் வழியாக கடக்க போகிறது. இதனால் அந்த அளவுக்கு கனமழை இல்லாவிட்டாலும் நல்ல மழை இருக்கும். இன்று கேளம்பாக்கம், சிறுச்சேரி உள்ளிட்ட கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இந்த மழை மேலும் இரு நாள்களுக்கு தொடரும். நாளை மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
தென்தமிழகத்துக்கு மட்டுமே
சென்னையை பொறுத்தவரை கனமழைக்கும், மிகுந்த கனமழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதே வேளையில் தென்தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நல்ல மழை உண்டு
காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்துக்கு அருகே வரும் போது வலுவடையும். குமரி கடல்பகுதியில் உள்மாவட்டங்களில் நாளை நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் காலங்களில் சென்னைக்கு மழை உண்டு. ஆனால் கனமழை என்பது தென் தமிழக பகுதிகளான டெல்டா பகுதி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும்தான்.
வாய்ப்பு இல்லை
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது புயலாக மாறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இது நாளை மறுதினம் நகர்ந்து அரபிக் கடலில் போய்விடும். அதன்பின்னர் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறினாலும் மாறாவிட்டாலும் நமக்கு ஒரு பயனும் இல்லை. வரும் டிசம்பர் மாதம் 4-ஆவதாக அதிதீவிரமான காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். அது புயலாக மாற வாய்ப்புள்ளது. ஆனால் அது தமிழகத்தை நோக்கி வருமா, அல்லது ஆந்திரத்தை நோக்கி செல்லுமா என்பதை இப்போதே கணிக்க முடியாது. அந்த காற்றழுத்த பகுதி உருவான பிறகுதான் கூற முடியும்.
சென்னைக்கு சராசரி மழை வந்துவிட்டது
தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் ஆங்காங்கே சில மணி நேரங்களுக்கு மட்டுமே நல்ல மழை பெய்யும். வடகிழக்கு பருவமழையின் சராசரி மழை சென்னைக்கு முதல் 2 வாரத்தில் வந்துவிட்டது. தென் தமிழகத்தில்தான் மக்கள் மழையில்லாமல் தவித்து வருகின்றனர் என்றார் அவர்.