மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் அத்துமீறி பயணம்: 22 பயணிகளிடம் தலா ரூ.400 அபராதம் வசூல்
சென்னை: ரயில்களில் மாற்றுத் திறனாளிகள் பெட்டிகளில் ஆர்.பி.எப். போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அதில் அத்துமீறி பயணம் செய்த 22 பயணிகள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து தலா ரூ. 400 அபராதம் வசூலிக்கப் பட்டது.
அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காக மாற்றுத் திறனாளிகள் பெட்டியை அமைத்துள்ளது ரயில்வே நிர்வாகம். ஆனால், அதில் சிலர் அத்துமீறி பயணம் செய்து, மாற்றுத் திறனாளிகளுக்கு இடையூறு செய்வதாக சென்னை செண்டிரல் ரயில் நிலைய பாதுகாப்புப் படை ( ஆர்.பி.எப். ) போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வருவதுண்டு. அதன்படி, மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் திடீர் சோதனை நடத்தி, அத்துமீறி பயணம் மேற்கொள்பவர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது.

அந்தவகையில், நேற்று சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் ஜி.டி.எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஆர்.பி.எப். போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் 22 பயணிகள், அத்துமீறி பயணம் செய்து வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் தலா ரூ.400 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆர்.பி.எப். இன்ஸ்பெக்டர்கள் அழகர்சாமி, திலீப் ஆகியோர் கூறுகையில், ‘‘சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்களில் இதுபோன்ற எந்த அத்துமீறிய பயணங்கள் நிகழ்வதில்லை. வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் இனி தொடர் சோதனைகள் நடத்தப்படும்'', என்றனர்.












Click it and Unblock the Notifications