அங்கிட்டு கொட்டித் தீர்த்த மழை இங்கிட்டு பெய்யக் கூடாதா சாமிகளா... ஏங்கும் 'உள்மாவட்டங்கள்'
திண்டுக்கல்: 40 மணிநேரம் இடைவிடாத மழை... வெள்ளக்காடாகி மூழ்கிய சென்னை.. அத்தனை டி.எம்.சி. நீரும் கடலில் கலக்கிறது.. இந்த கதிகலங்க வைக்கும் செய்திகளை காட்சிகளை படிக்கும் கேட்கும் பார்க்கும் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட "உள்மாவட்ட" விவசாயிகள் ஏக்கம்தான் "அங்கிட்டு கொட்டித் தீர்க்கும் மழை இங்கிட்டு பெய்யக் கூடாதா சாமி.."

சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கடந்த பல வாரங்களாக வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது... ஆந்திராவில் அடைமழை பெய்து அணைகள் நிரம்ப அந்த நீரும் திறந்துவிட அத்தனை ஏரிகளும் குளங்களும் கால்வாய்களும் நிரம்பி ஆறுகள் கொள்ளமுடியாத அளவுக்கு பெருக்கெடுத்து ஓடி கடலில் கலந்து கொண்டிருக்கின்றன..

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் குடியேறி இப்போது தத்தளித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலானோர் சாண் வயிற்று பிழைப்புக்காக சென்னைக்குள் தஞ்சம் புகுந்து நாங்களும் நிமிர்ந்து நிற்கிறோம் என நெஞ்சை நிமர்த்த புறநகர்களில் வீடுகளை கட்டிப் போட்டு ஆசுவாசமாய் அமர்ந்த தென்மாவட்ட ஜீவன்கள்தான்... வம்பாடு கட்டிய வீடெல்லாம் வெள்ளம் வீம்புக்கு இழுத்துப் போன கதையாகிப் போய்விட்டது...

அதே நேரத்தில் கொட்டும் மழையில் வடதமிழகம் தத்தளிக்க தென் தமிழகமோ வழக்கமான பருவமழைக்காக இன்னமும் காத்துக் கிடக்கின்றன... ஆறுகளில் சொல்லும்படியாக மழை நீர் பாதத்தைக் கூட நனைக்காத அளவுக்கு பட்டும் படாமல் அவ்வப்போது வரும்... ஆம் "வரும்.. ஆனால் வராது" என்கிற அளவுக்கு போய்க் கொண்டிருக்கிறது..

அணைகள் நிரம்ப அதன் உபரி நீரால் தாகம் தணித்துக் கொண்டிருக்கின்றன கால்வாய்களும் கண்மாய்களும்.. இத்தனைக்கும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களைப் போல பேராக்கிரமிப்புகள் இல்லாத வானிலை மைய அகராதிப்படியான உள்மாவட்டங்களான திண்டுக்கல், கரூர் போன்றவற்றில் மழை பெய்ததாமே? எங்க ஊரில் காணோம்... என்கிற ஏக்க மூச்சுகள்தான் பேருந்துகளிலும் சந்தைகளிலும்..

திண்டுக்கல் நகரத்தில் சில நேரத்தில் கனமழை கொட்டும்.. ஆனால் நகரை விட்டு வெளியே வந்து 2 கி.மீ பார்த்தால் ஏதோ அதிசயம் நிகழ்ந்தது போல சொட்டு மழையும் அந்த பகுதியில்வந்திருக்காது... பேருந்துகளில் ஏறும் போது மழை இருக்காது.. நடுவில் ஒரு ஊரில் ஊற்றிக் கொட்டும்... அடுத்த ஊரில் சொட்டு மழையும் இருக்காது.. இறங்கும் இடத்தில் வெயில் மண்டையை பிளக்கும்.. இந்த வினோத பருவநிலைதான் இங்கே எல்லாம்..

அப்படியே கனமழை கொட்டினாலும் பராமரிக்கப்படாத கால்வாய்களானாலும் ஓடைகளானாலும் வெள்ள நீரை வாங்கிக் கொண்டு ஏதோ ஒரு குளத்தில் கொண்டு சேர்த்து அந்த குளம் வழிந்து இன்னொரு வாய்க்காலில் வழிந்தோடி மற்றொரு குளத்தை நிரப்பிவிடும்..அதுவும் வெளியேறி இன்னொரு குளம்.. என முன்னோர் விட்டுச் சென்ற அந்த நீர்வழித் தடம் செத்துப் போகாமல் இருப்பதால் இத்தனை பேரவலம் வரப்போவது இல்லை..
பெருமழை வெள்ளம் ஏற்பட்டு நிலத்தடி நீர் பெருகி வானம் பார்த்த கிணறுகள் நீர் சுரந்து பால்வார்க்கும் என்ற பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் இந்த பகுதி விவசாயிகள்..

அந்தமானில் தாழ்வழுத்தம் என்றால் நமக்கு மழை வந்துவிடும்... இன்னும் ரெண்டு நாளில் வந்துவிடும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் இது போன்ற உள்மாவட்ட மக்கள்...
வருணனின் கருணை கிடைத்துவிடுமா?












Click it and Unblock the Notifications