கேரளாவில் மட்டும்தானா.. இன்னும் 2 நாளில் தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை… வானிலை மையம் அறிவிப்பு
கேரளத்தில் இன்று தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை தென் தமிழகத்தில் இன்னம் 2 நாளில் தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: இன்னும் 2 நாளில் தென் தமிழகத்திலும் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கும். அதைதொடர்ந்து இந்த மழை தமிழகத்தின் தென் பகுதிகளிலும் பெய்ய தொடங்கும்.
ஆனால் இந்த முறை மே மாதம் 30ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதற்கேற்ப இன்று கேரளாவில் மழை பொழியத் தொடங்கிவிட்டது.

தொடங்கியது தென்மேற்கு பருவமழை
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடந்த இரு தினங்களாக கேரளாவில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்கியுள்ளது.

தமிழகத்திலும் பருவமழை
அடுத்த 2 அல்லது 3 தினங்களில் தென்மேற்கு பருவமழை தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்திலும் பருவமழை தொடங்கிவிடும்.

எங்கு எவ்வளவு மழை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. சிவகங்கை மற்றும் குளச்சலில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 செ.மீ மழையும், தக்கலை, மயிலாடுதுறையில் 5 செ.மீ மழையும், திருவாரூர், நாகர்கோயிலில் 4 செ.மீ. மழையும், கமுதி, காரைக்ககுடி, பேச்சுப்பாறை ஆகிய பகுதிகளில் 3. செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில் மிகக் குறைவாக 2.9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இன்று மழை வருமா?
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதனையடுத்து உள் மாவட்டப் பகுதிகளில் பூமி குளிரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications