ஈரோடு அருகே பொதுமக்களிடம் இருந்து டி.எஸ்.பி.யை மீட்ட எஸ்.பி.!
ஈரோடு: ஈரோடு அருகே தடியடி நடத்திய டி.எஸ்.பி.யை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவரை எஸ்.பி. வந்து மீட்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது பி.கே பழையூர் பனங்காட்டு காலனி. இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
ஒவ்வோரு வருடமும் இங்கு பட்டதரசி அம்மன் கோவில் விழா வெகு சிறப்பாக நடைபெறும். அதே போல இந்த வருடம் பட்டதரசி அம்மன் திருவிழா நடைபெற்றது. நேற்று முன் தினம் இரவு மஞ்சள் நீர் ஊற்றும் விழா நடைபெற்றது. அப்போது நடைபெற்ற ஊர்வலத்தில் போலீஸ் என்று வாசகம் அடங்கிய பனியனை அருணாசலம் என்பவர் அணிந்து ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி சென்றார்.
இதையடுத்து போலீசார் அருணாசலத்திடம் அந்த பனியனை கழற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதற்கு அருணாசலம் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பவானி டி.எஸ்.பி ஆறுமுகம் அருணாசலம் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் டி.எஸ்.பி. ஆறுமுகத்தை முற்றுகையிட்டனர். பின்பு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நிலைமை மோசமாவதை கண்ட போலீசார் ஆறுமுகத்தை கும்பலில் இருந்து மீட்க பொது மக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 4 பேர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கப்பட்டனர்.
இந்த நிலையில், போலீசாரின் தடியடியை கண்டித்து அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் டி.எஸ்.பி. ஆறிமுகத்தின் ஜீப்பையும் முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த எஸ்.பி. சிபி சக்ரவர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களுடன் சமாதான பேச்சு நடத்தி டி.எஸ்.பி. ஆறுமுகத்தை மீட்டார்.
மேலும் டி.எஸ்.பி. மீது முறைப்படி புகார் கொடுத்தால் அதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் மற்றும் முற்றுகை் போராட்டம் காரணமாக அப்பகுதியில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.