கன்னியாகுமரி தொகுதியில் "பொன்னார்"-க்கு எதிராக கூடங்குளம் உதயகுமார் போட்டி?
கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. அவருக்கு எதிராகவும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களின் வலிமையை வெளிக்காட்டவும் சுப. உதயகுமாரை களத்தில் இறக்குவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக உதயகுமாரையே ஆம் ஆத்மி கட்சியின் கன்னியாகுமரி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கையெழுத்துகள் பெறப்பட்டு வருகின்றனவாம். இதை ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மேலிடத்துக்கு அனுப்பி வைக்கவும் உதயகுமார் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தற்போதைய சூழலில் கன்னியாகுமரி தொகுதியில் உதயகுமாருக்கே அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் சார்ந்த நாடார் சமூக வாக்குகள், கூடங்குளம் போராட்டத்தை ஆதரிக்கும் மீனவர்கள், கூடங்குளத்துக்காக தொண்டு நிறுவனங்களை இழந்த கிறிஸ்தவர்கள் என பலதரப்புமே உதயகுமாரை ஆதரிப்பதாக தெரிகிறது.
இதனால் பொன்னாரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக உதயகுமார் களமிறங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.