புதிய வாக்காளர் பெயர் சேர்க்க ஜனவரி 31 ஆம் தேதி சிறப்பு முகாம்
நெல்லை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 31ம் தேதியும், பிப்ரவரி 7 ஆம் தேதியும் சிறப்பு முகாம் நடக்கிறது.
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல், மே மாதம் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. முதல் கட்டமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலர்கள் ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 18 வயது நிரம்யியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக 1.1.2016 ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியல் தமிழகம் முழுவதும் கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் அனைத்து தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இந்த பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இம்மாதம் 31 ஆம் தேதியும், அடுத்த மாதம் 7 ஆம் தேதியும் அந்தந்த வாக்கு சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க, ஒரே தொகுதிக்குள் மாற்ற விண்ணப்பம் அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது வாக்காளர் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிப்பவர்களும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படுவர். இதன் மூலம் வரும் சட்டசபை தேர்தலில் அவர்களும் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications