சென்னை ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல் வெடித்தது! போட்டி அலுவலகமும் திறப்பு!!
சென்னை: தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. சென்னையில் ஆம் ஆத்மி கட்சியின் போட்டி அலுவலகமும் திறக்கப்பட்டிருக்கிறது.
டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாட்டில் கால் பதித்தது. சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகமும் திறக்கப்பட்டது. கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கட்சியின் மாநில பொருளாளர் ஆனந்தகணேஷ் என்பவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். "மாத இறுதியில் கட்சியின் தமிழக மாநாடு நடைபெறும். இதில் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்து கொள்கிறார். அத்துடன் தேர்தலில் போட்டியிட 200 பேரிடம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. எங்கள் கட்சியை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. தவறாக நடப்பவர்கள் கட்சியில் நீடிக்க முடியாது. இதுவரை 6 உறுப்பினர்கள் நீக்கப்பட்டு உள்ளனர் என்றார்.
பேட்டிக்கு எதிர்ப்பு
இந்த நிலையில் ஆனந்த கணேஷின் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி.நாராயணன், மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் தனசேகரன், நிர்வாகிகள் அருண், ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக அமைந்தகரை மார்க்கெட் அருகே உள்ள ஒரு அலுவலகத்தில் நேற்று பேட்டி அளித்தனர்.
'பொருளாளர்' கட்சிக்காரரே இல்லை..
அவர்கள் கூறுகையில், நேற்று காலை பத்திரிகையில், எங்கள் கட்சியில் 6 பேர் நீக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. எங்களை நீக்கியவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் அல்ல. கட்சியில் உறுப்பினரை நீக்க வேண்டும் என்றால் கட்சியின் செயற்குழு கூடி பரிந்துரை செய்ய வேண்டும் என்றனர்.
இங்க தான் ஆபீஸ்...
அத்துடன், அமைந்தகரை மார்க்கெட் அருகேதான் மாநில அலுவலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. இதுதான் அலுவலகம் என்றனர்
கணக்கு கேட்டதால் நீக்கம்...
மேலும் ஆனந்தகணேசிடம் கட்சி தொடர்பான கணக்குகளை கேட்டோம். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதோடு எங்களுக்கு தெரியாமல் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டார் என்றும் புகார் பத்திரம் வாசித்தனர்.
வசூலை அம்லபடுத்துவோம்
"இதுபோன்று செயலில் ஈடுபட்டால் அவர்கள் செய்யும் தவறுகளை குறிப்பாக பணம் வசூல் செய்வது குறித்து வெளிப்படையாக எடுத்துக் கூறுவோம்" என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதெல்லாம் நீக்கியாச்சு- பதில்
இதுபற்றி ஆனந்த கணேசிடம் கேட்டபோது, பேட்டி அளித்தவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் என்று பதில் அளித்தார்.
சென்னையில் கட்சி தொடங்கிய 2 நாளிலேயே கட்சியில் ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல் வெடித்திருப்பதுடன் போட்டி அலுவலகமும் திறந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஹா இப்பவே கண்ணை கட்டுதே..












Click it and Unblock the Notifications