Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருதுநகர் மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசலா? நிர்வாகிகள் மாற்றத்தால் புகைச்சல்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் மீண்டும் தலை தூக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கு பிறகு இந்த பூசல் உச்சத்துக்கு சென்றுள்ளது.

விருதுநகர் தொகுதியில் நட்சத்திர வேட்பாளரான மதிமுகவின் வைகோவை தோற்கடித்து வெற்றியை ருசித்தது அதிமுக. அப்படியிருந்தும் அம்மாவட்டத்து அ.தி.மு.கவில் ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர், வழக்கறிஞர் பிரிவு செயலாளர்கள் உள்பட 12 பேர் அதிரடியாக நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதில் அருப்புக்கோட்டை எம்.எல்.ஏவும், முன்னாள் பள்ளி கல்வி துறை அமைச்சருமான வைகைச் செல்வன் ஆதரவாளர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஓண்டுக்கு முன்பு பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக வைகைச்செல்வன் இருந்தபோது, அருப்புக்கோட்டை பகுதியில் முக்கிய பதவிகளில் இருந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.

அந்த இடங்களில் வைகைச்செல்வன் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டனர். இப்போது அந்த இடங்களுக்கு ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் பந்தாடப்படுவதுதான் இரு தரப்பினருக்கும் இடையே புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.

அருப்புக்கோட்டை நகரச் செயலாளர் பதவியை இழந்த சிவசங்கரன் இதுகுறித்து கூறியுள்ளதாவது: 'விருதுநகர் மாவட்ட அ.தி.மு.கவில் தன்னை மீறி யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கவனமாக இருக்கிறார். சாத்தூரில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ வைகைச்செல்வன், ராஜபாளையம் எம்.எல்.ஏ கோபால்சாமி ஆகியோருக்கு எதிராக ஒரு கோஷ்டியை உருவாக்கியுள்ளார்.

வைகைச்செல்வன் அமைச்சராக இருந்தபோது, அருப்புக்கோட்டை சட்டசபைத் தொகுதியில் சரிவர செயல்படாத அப்போதைய நகரச் செயலாளர் கண்ணனையும், அருப்புக்கோட்டை ஒன்றியச் செயலாளர் கெப்பையராஜையும் நீக்கிட கட்சி தலைமைக்கு சிபாரிசு செய்தார்.

'அம்மா' பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட முரசொலி பத்திரிகையை 2007ம் ஆண்டு நடுரோட்டில் தீ வைத்து எரித்தோம். அந்த வழக்கில் சிறை சென்ற 174 அதிமுகவினருக்கும் எனது சொந்த இடத்தில் இருந்து ஆளுக்கு ஒரு கிரவுண்ட் பதிவு செய்து கொடுத்தேன். இதுபோன்ற ஈடுபாட்டை வைத்துத்தான் வைகைச்செல்வன் எனக்கு அருப்புக்கோட்டை நகரச் செயலாளர் பதவி வாங்கிக் கொடுத்தார். ஆனால் இப்போது என்னை பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜி நீக்கியிருக்கிறார்.

தற்போது நகரச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கண்ணன் மீது, தி.மு.கவினரோடு நெருக்கமாக இருக்கிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் தனது ஜாதிக்காரர் என்ற ஒரே காரணத்துக்காக கண்ணனை நியமித்திருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. என்னை மாற்றியதற்கு, லோக்சபா தேர்தலில் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு என்கிறார்கள். லோக்சபா தேர்தலில் அருப்புக்கோட்டை சட்டசபைத் தொகுதியில் தி.மு.கவைவிட 16 ஆயிரம் ஓட்டுக்கள் கூடுதலாக வாங்கிக் கொடுத்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ராஜேந்திரபாலாஜி கூறுகையில், ''லோக்சபா தேர்தலில் சரியாக வேலை செய்யாத, கட்சிப் பணத்தை முறையாக செலவு செய்யாத கட்சி நிர்வாகிகள் மீது தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. நான் கட்சிக்காரர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்பவன். யார் மீதும் எனக்கு எந்தக் காழ்ப்பு உணர்ச்சியும் இல்லை'' என்றார்.

விருதுநகர் மாவட்டத்தில் இப்படி ஒரு கோஷ்டி பூசல் இருந்தும்கூட வைகோ வெற்றிபெற முடியவில்லை என்பதுதான் இதில் ஹைலைட்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+