கிருஷ்ண ஜெயந்தி: நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்
சென்னை: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார தினமான ஜென்மாஸ்டமி தினம் நேற்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்திலும் பல்வேறு வீடுகளில் மாவிலைத் தோரணங்களால் அலங்கரித்து, குட்டிக்கண்ணனின் பாதம் வரைந்து கண்ணனுக்குப் பிடித்த உணவுப்பண்டங்களைப் படைத்து உற்சாகமாக கிருஷ்ண ஜெயந்தி விழாவைக் கொண்டாடினர்.
அவல், முறுக்கு, சீடை
ஆவணிமாதம் அஷ்டமி திதியில் பகவான் கிருஷ்ணன் அவதரித்தார் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டுதோறும், ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி நன்னாளில் ஜென்மாஷ்டமி தினத்தை இந்துக்கள் கொண்டாடுகின்றனர். நேற்றைய தினம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணெய், அவல், சீடை, முறுக்கு போன்ற பட்சணங்களைப் படைத்து இறைவனை வழிபட்டனர்.
குட்டிக்கண்ணன்கள்
வீடுகளில் உள்ள குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்து அவர்களுக்கு பட்சணங்களை கொடுத்து வழிபட்டனர். ஏராளமான மக்கள் அரிசி மாவினை தண்ணீரில் கலந்து, அதனை கிருஷ்ணரின் கால் பாதங்கள் போன்று வீட்டினுள் அச்சாக வைத்து, தங்களுடைய வீட்டிற்கு கிருஷ்ணரே வந்ததாக பாவித்து அகம் மகிழ்ந்தனர்.
திருச்சி பள்ளியில்
திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பள்ளிக்குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்து கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடினர். அவர்களுக்கு பழங்கள், முருக்கு, அதிரசம், சீடை ஆகியவைகளைக் கொடுத்து ஆசிரியர்கள் உற்சாகமூட்டினர்.
சென்னையில் கொண்டாட்டம்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பெண்கள் 108 பால் குடங்களை எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் அந்த பாலை கொண்டு கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சில கோவில்களில் உறியடி திருவிழாவும் நடைபெற்றன.
இஸ்கான் கோவில்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, அக்கரையில் உள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ‘இஸ்கான்' கிருஷ்ணர் கோவிலில், கிருஷ்ணர் சிலைக்கு உத்தரபிரதேசம், ஹைதராபாத் போன்ற மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட முத்து, பவளம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதித்த ஆடை அணிவிக்கப்பட்டு, மங்கள, தூப், ராஜ் பக், துளசி, சந்திய போன்ற பலவகையான ஆரத்திகள் ஏற்றப்பட்டன. பின்னர் கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’
கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பழங்கள், தாமரை பூக்களை கொண்டு கிருஷ்ணரை வழிபட்டனர். மேலும் பக்தர்கள் அனைவரும் கிருஷ்ணர் குறித்த பஜனை பாடல்களை பாடிய படியே, ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்று பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். கிருஷ்ண ஜெயந்தியின் முக்கிய நிகழ்வாக ‘‘இஸ்கான்'' கிருஷ்ணர் கோவிலில் இன்றும்(வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் 12.30 மணி வரை கிருஷ்ணருக்கு பல்வேறு வகையான பழங்கள், தேன், மற்றும் பால்வகை பொருட்களை கொண்டு 150 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற இருக்கின்றன.
குழந்தைகளுக்கு பரிசு
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், குழந்தைகளுக்கு கடந்த 5 வாரங்களாக நடத்தப்பட்ட மாறுவேட போட்டி, ஓவிய போட்டி போன்றவற்றில் பங்குபெற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு இன்று பரிசுகளும் வழங்கப்படுகிறது.
நெல்லையில் கோலாகலம்
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன. சிறப்பு பொது தரிசனம் நடைபெற்றது.
பஜனைப் பாடல்கள்
மாலையில் ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபம், ஹரி நாம சங்கீர்த்தனம், மகா அபிஷேகம், வண்ண மலர்களால் அலங்காரம், 81 தீப ஆராதனைகள், 51 நைவேத்தியங்கள் படைத்து சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும், 108 கலசங்களில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் கிருஷ்ண பலராமரின் விக்ரஹங்களுக்கு மகாஅபிஷேகம் நடைபெற்றது.
அபிஷேக ஆராதனை
பின்னர் பஞ்சாமிர்தம், பஞ்சகவ்யம், இளநீர், பழரசங்கள் உள்ளிட்டவற்றால் அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றன. பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோயில், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக, அலங்கார தீபாராதனைகள், சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெற்றன.
கிருஷ்ணன், ராதை ஊர்வலம்
சேவாபாரதி அமைப்பு சார்பில் மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. சின்னக்குழந்தைகளை, ராதை, கிருஷ்ணராக அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். கிருஷ்ணர் பாடல்களைப் பாடியபடி குறிச்சியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக அவர்கள் ஊர்வலமாக வந்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் கண்ணன்
நாமக்கல் நகரிலும் பல்வேறு கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட் டது. ராசிபுரத்தில் உள்ள பட்டைபெருமாள் சாமி கோவிலில் சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப் போது சந்தான கோபால கிருஷ்ண சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், மோகனூர், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களிலும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன.
2.5 லட்சம் பக்தர்கள்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி 2.5 லட்சம் பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.