இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்- 4 புதுக்கோட்டை மீனவர்களை சிறை பிடித்தது!
புதுகை: புதுகை மாவட்ட மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை மீண்டும் சிறை பிடித்துச் சென்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 241 விசைப்படகுகளில் 900 க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று அதிகாலை மீன் துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் மற்றும் அவரது மகன் ஷியாம், ராசு மகன் சிவக்குமார், ஏர்வாடியை சேர்ந்த காஜா ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை னர் விசைப்படகை சுற்றி வளைத்ததோடு, எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 4 பேரையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 4 பேரையும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் சிறை பிடிக்கப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 18 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.