தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய இலங்கைக் கடற்படை!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டியுள்ளனர் இலங்கைக் கடற்படைக் காடையர்கள். இதில் மீனவர்களின் 20க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளன.
இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளதாக ராமேஸ்வரம் மீனவர் சங்கமும், தமிழக அரசின் மீன்வளத்துறையும் தெரிவித்துள்ளது.
இன்று காலை 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள், 626 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். கச்சத்தீவு, தலைமன்னார், நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆறு படகுகளில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். படகுகளை நோக்கி அவர்கள் சரமாரியாக சுட்டனர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் வேகமாக படகுகளை திருப்பிக் கொண்டு இ்ந்திய எல்லைக்குள் விரைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 20க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.