விஜய்க்கு வாழ்த்து சொன்ன.. இலங்கை அதிபர்! கச்சத்தீவு பஞ்சாயத்து முடிவுக்கு வருது!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். அவருக்கு இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். மாநில முதலமைச்சர் பதிவியேற்புக்கு மற்றொரு நாட்டின் அதிபர் வாழ்த்து சொல்லியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
மட்டுமல்லாது, கச்சத்தீவை மீட்டு கொடுக்க வேண்டும் என்பது விஜய்யின் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், தற்போது விஜய்க்கு இலங்கை அதிபர் வாழ்த்து தெரிவித்திருப்பதன் மூலம், இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்க இலங்கை முன்வந்திருக்கிறதா? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

அநுர குமார தனது x பக்கத்தில், "தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு எனது வாழ்த்துகள். இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாச்சாரம், தொழில்முனைவு மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் மக்கள் இடையிலான ஆழமான பிணைப்புகள் ஆகியவற்றின் மூலம் ஒன்றிணைந்துள்ளன.
இலங்கையும் இந்தியாவும் தொடர்ந்து மிக நெருக்கமான உறவுகளையும், வலுவான கூட்டாண்மையையும் வளர்த்து வருவதால், நமது எதிர்காலம் அளப்பரிய பொருளாதார நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்தியா-இலங்கை இடையிலான வலுவான கூட்டாண்மையின் கட்டமைப்பிற்குள் நின்று, மிகுந்த செழுமையையும் முன்னேற்றத்தையும் அடைவதை இலக்காகக் கொண்டு, இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். தங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிட்ட வேண்டுமென, இலங்கை மக்கள் சார்பாக நானும் இணைந்து வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
வழக்கமாக பிரதமர் பதவியேற்புக்குதான் மற்றொரு நாட்டின் அதிபர் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். ஆனால், தற்போது மாநில முதலமைச்சராக விஜய் பதவியேற்றிருப்பதற்கு இலங்கை அதிபர் வாழ்த்து தெரிவித்திருப்பது அனைவரின் புருவங்களையும் உயர்த்திருக்கிறது.
அதேநேரம், தமிழகம் இலங்கை இடையே மீனவர் பிரச்சணை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இதற்கு முன்னர் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த திராவிட கட்சிகளால் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போதும், கைது செய்யப்படும்போதும் கடலோர மாவட்டங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஆட்சியாளர்களால் எட்டப்படவில்லை.
இந்த விஷயத்தில் தீர்வு வேண்டும் எனில் கச்சத்தீவு மீண்டும் மீட்கப்பட வேண்டும் என்று விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். அப்படியெனில் தற்போது அவர் ஆட்சிக்கு வந்திருப்பதால், கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் விஜய்க்கு வாழ்த்து சொல்லி தமிழகத்துடன் இணைந்து பயணிக்க இலங்கை விருப்பம் தெரிவித்திருப்பதால், கச்சத்தீவு விஷயத்தில் இலங்கை அரசும் சுமூக தீர்வை விரும்புவதாக சொல்லப்படுகிறது.
எது எப்படி இருப்பினும், புதிய அரசு தற்போது பொறுப்பேற்றிருக்கிறது. எனவே இனியும் மீனவர் பிரச்சனை முடிவுக்கு வருமா? என்று பலருக்கும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications