எச்.ராஜா, கிருஷ்ணசாமியுடன் அறநிலையத்துறைக்கு எதிராக நவ.5-ல் சென்னையில் போராட்டம்-சோடா பாட்டில் ஜீயர்
ஶ்ரீவில்லிப்புத்தூர்: கோவில் விவகாரங்களில் இந்து சமய அறநிலையத்துறை தலையிடுவதைக் கண்டித்து சென்னையில் வரும் 5-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் சடகோப ராமானுஜ ஜீயர் அறிவித்துள்ளார்.
ஆண்டாள் குறித்த ஆய்வு கவிஞர் வைரமுத்துவின் விவகாரத்தில் எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும் என பேசி பெரும் சர்ச்சையில் சிக்கியவர் சடகோப ராமானுஜ ஜீயர். தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்க்க போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
ஶ்ரீவில்லிப்புத்தூரில் சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ராமானுஜர் உருவாக்கிய வழிபாட்டு முறைகள் மாற்றப்பட்டுள்ளன. இதனை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மாற்றி இருக்கின்றனர்.

தன்னிச்சையாக செயல்படும் அதிகாரிகள்
தென்கலை சம்பிரதாய கோவில்களில் மரபுகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. கோவில் நிர்வாகத்தைப் பொறுத்தவரை சிறப்பாக நடக்க வேண்டும் என்றே நினைக்கிறது. அறநிலையத்துறையும் ஒத்துழைப்பு அளிக்கிறது. இருந்த போதும் சில அதிகாரிகள் தன்னிச்சையான போக்குடன் செயல்படுகின்றனர்.

அதிகாரிகள் தலையீடு கூடாது
பொதுவாக கோவிலின் உள்விவகாரங்களில் அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிடக் கூடாது. ஆனால் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அப்படி அதிகாரிகள் நடப்பது இல்லை. பெருமாளுக்கு நைவேத்யம் தொடங்கி பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தமிழக அரசுக்குதான் கெட்ட பெயரை ஏற்படுத்தும்.

சென்னை போராட்டம்
ஆகையால் அறநிலையத்துறை தவறுகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. இதனை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 5-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா பங்கேற்க உள்ளனர். இவ்வாறு சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.

சோடா பாட்டில் விவகாரம்
ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்து ஆய்வு விவகாரம் விமர்சிக்கப்பட்டது. ஆண்டாளை கவிஞர் வைரமுத்து இழிவு செய்துவிட்டதாக கொந்தளிப்பு எழுந்தது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சடகோப ராமானுஜ ஜீயர், சாமியார்களால் என்ன செய்துவிட முடியும் என நினைக்கிறீங்க? நாங்கள் எதற்கும் துணிந்தவர்கள். கல் எறியவும் சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும் என்றார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையான நிலையில் மன்னிப்பு கேட்டார் சடகோப ராமானுஜ ஜீயர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications