'தமிழகத்தின் தாவூத்'.. டான் ஸ்ரீதரின் பரபரப்பு பின்னணி!
Recommended Video

சென்னை: 'தனபாலன் ஸ்ரீதர்' என்ற பெயர் தமிழக காவல்துறையில் வெகு பிரபலம். குறிப்பாக, காஞ்சிபுரம் வட்டாரத்தில் இவரை பற்றி சிறு குழந்தைகளுக்கும் தெரியும்.
ரியல் எஸ்டேட் தாதாவான இவர் மீது 7 கொலை, 14 கொலை முயற்சி, ஆட்கடத்தல் உள்பட 43 வழக்குகள் இருக்கிறதாம். இதனால்தான், டான் ஸ்ரீதரை தமிழகத்தின் தாவூத் என்று அழைத்தனர் காவல்துறை வட்டாரத்தில்.
சென்னைக்கு அருகே ரூ. 500 கோடி மதிப்பிலான ரியல் எஸ்டேட் ரவுடித்தன ராஜாங்கத்தை செயல்படுத்தி வந்தவர்தான் ஸ்ரீதர். ஒரு காலத்தில் சாராயம் விற்பனை செய்து வாழ்க்கையை நடத்திய இவர், இன்று மொத்த காவல்துறையும் தேடப்படும் நபராக மாறக் காரணம் ரியல் எஸ்டேட் சார்ந்த ரவுடித்தனங்கள்.

சாராய தொழில்
1972ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி பிறந்த ஸ்ரீதர், 1984ல் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு, நெசவுத்தொழிலுக்கு சென்றார். 1992ல் சட்ட விரோத தொழில்களை ஆரம்பித்த பிறகுதான் இவரது வாழ்க்கை பாதை மாறியது. 2008 வரை சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார் ஸ்ரீதர்.

சரணடைய விருப்பம்
இந்த நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு கடந்த வருடம் ஜனவரியில் அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் தான் சரணடைய தயாராக இருப்பதாகவும், நியாயமான முறையில் விசாரணை நடைபெறும் என டிஜிபியும். ஏதாவது ஒரு நல்ல ஐஏஎஸ் அதிகாரியும் உத்தரவாதம் அளித்தால் தான் சரணடையத் தயார் என்றும் கூறியுள்ளார் ஸ்ரீதர்.

ஆயில் தொழில்
2013ல் இந்தியாவை விட்டு தப்பியோடிய ஸ்ரீதரின் பாஸ்போர்ட் 2015ல் ரத்து செய்யப்பட்டது. நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தான் துபாயில் ஆயில் பிசினஸ் செய்வதாகவும், அதன் மூலமாகவே வருமானம் ஈட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார் அவர். மாதம் ரூ.1.2 கோடி அளவுக்கு வருவாய் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

சவால் விடுத்தபடி தற்கொலை?
தனது பேட்டியின்போது அவர் கூறுகையில், என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் காட்ட வேண்டும். அதில் உண்மை இருந்தால் நானே சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும் சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில், கம்போடியாவில் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இன்று காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications