எல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்.. வலைகளை அறுத்து அட்டூழியம்
எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
ராமநாதபுரம்: எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது
தமிழக மீனவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்துவதும் அவர்களை கைது செய்வதையும் இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிந்தனர். அப்போது 7 ரோந்து படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்கள் கண்ணாடிகளை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் மீனவர்கள் போட்டிருந்த மீன்பிடி வலைகளையும் இலங்கை கடற்படையினர் அறுத்தெரிந்தனர். மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் அவர்கள் விரட்டியடித்துள்ளனர்.
இதையடுத்து உயிர் பிழைத்தால் போதும் என தமிழக மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். ஏற்கனவே ஓகி புயலால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசத்தால் பீதியடைந்துள்ளனர்.