தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்... ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: வீடியோ
ராமேஸ்வரம் மீனவர்கள் நான்குபேரை இலங்கை கடற்படை கச்சத்தீவு அருகே தாக்கி கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் நான்கு பேரை, கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் படகுகளையும் பறித்துச் சென்றுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 2000 மீனவர்கள் 500 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது கச்சத்தீவு அருகே சில மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, சேகர் என்பவரது படகை இலங்கை கடற்படை தாக்கியுள்ளது. மேலும் அந்தப் படகில் இருந்த நான்குபேரின் செல்போன், பணம், படகில் இருந்த மீன் என எல்லாவற்றையும் பறித்துள்ளது.
அதோடு நில்லாமல், அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து படகையும் பறித்து சென்றுள்ளது. புதுக்கோட்டை தென்கரையைச் சேர்ந்த மீனவர் 4 பேரையும் கைது செய்துள்ளது.
தங்கச்சிமடம் பிரிட்ஜோவை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படைக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாகியபோதும் அதை, இலங்கை அரசும் கடற்படையும் பொருட்படுத்தவில்லை என்பதையே இக்கைது சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன.