ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 4 திமுகவினர் கைது
திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக திமுகவினர் 4 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதையடுத்து ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவியும், தமிழக முதல்வர் பதவியும் பறி போனது.
அதனைத் தொடர்ந்து காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 13-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அதிமுக, திமுக, பாஜக, கம்யூனிஸ்டுகள் உட்பட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் கருதப்படுவதால், பிரச்சாரத்தில் அனல்பறக்கிறது.
இந்நிலையில், இன்று காலை ஸ்ரீரங்கம் ராகவேந்திராபுரம் பகுதியில் ஒரு கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரனுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் பகுதியில் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
கார் உடைப்பு
அப்போது திமுக கொடி கட்டிய வாகனம் ஒன்றில் 4 பேர் பணம் விநியோகத்தில் ஈடுபட்டதாக கூறி அவர்களை அதிமுகவினர் தடுத்து நிறுத்தினர். அதோடு மட்டுமல்லாமல் வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். இதில் காரின் கண்ணாடி உடைந்தது. பின்னர் சேதமடைந்த வாகனத்தை ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.
4 பேர் கைது
இவர்கள் நான்கு பேரையும் தேர்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான மனோகரன் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து வாகனத்தில் இருந்த திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ரவி, தினகரன், ஆறுமுகம், ராமஜெயம் என்பதும், இவர்கள் நான்கு பேரும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
திமுகவினர் போராட்டம்
இதனை கண்டித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்பு திமுகவினர் கோஷமிட்டனர். மேலும், தங்கள் வாகனத்தில் ஆளும்கட்சியினர் வேண்டுமென்றே பணத்தை வைத்து எங்கள் மீது பழி போடுகின்றனர் என்று கூறினர். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் கொடுக்கவும் முடிவு செய்தனர்.
தேர்தல் ஆணையத்திற்கு புகார்
அதனடிப்படையில் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய புகார் கடிதத்தில், ஆளும்கட்சியினர் தங்கள் மீது வீண் பழிகளைப் போடுவதாகவும், பணத்தை நாங்கள் கொடுப்பது போல வாக்காளர்கள் கையில் திணித்தும், வாகனங்களில் வைத்தும் அவப்பெயர் உண்டாக்குவதாகவும் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிகாரியை மாற்றுங்கள்
ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரி மனோகரன் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் திமுக சார்பில் ஸ்ரீரங்கம் போலீசில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து உடனடியாக தேர்தல் அதிகாரி மனோகரனை மாற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இத்தேர்தல் நேர்மையானதாக நடைபெற வாய்ப்பில்லை என்றும் திமுகவினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications