அதிமுகவிற்கு ஆதரவாக களமிறங்கும் சரத்குமார்: ஸ்ரீரங்கத்தில் 4 நாள் பிரச்சாரம்
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் நான்கு நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
இது தொடர்பாக சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் அசைக்க முடியாத மக்கள் ஆதரவு பெற்ற சக்தியாக அ.தி.மு.க. விளங்குகிறது. மக்களின் முதல்வர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறார். மேலும் ஸ்ரீரங்கம் தொகுதியில் மிகச்சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி, தமிழகத்திலேயே முதன்மையான தொகுதியாக உருவாக்கி இருக்கிறார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மக்கள் முதல்வரின் ஆதரவு பெற்ற வேட்பாளராக போட்டியிடும் எஸ்.வளர்மதி மாபெரும் வெற்றி பெறுவது உறுதியான ஒன்று.
அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.வளர்மதியை ஆதரித்து வருகிற 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கம் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறேன்.
கடந்த 3 ஆண்டு கால மக்களின் முதல்வர் ஆட்சியில் தமிழகத்தில் நிகழ்த்தியுள்ள சாதனைகளை மக்கள் புரிந்து வைத்து இருக்கிறார்கள். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நோக்கோடு பல்வேறு சமூக உதவித் திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.
எதிர்க்கட்சிகள் செய்யும் பொய் பிரசாரங்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் பிரசாரமாக எனது பிரசாரம் அமைந்திடும். முடிந்தவரை தொகுதி முழுவதும் பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளேன்.












Click it and Unblock the Notifications