ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளம் - 8 பேரை இழுத்துச் சென்றது .. 200 பேர் தவிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 8 பேர் அடித்துச் செல்லப் பட்டனர். மேலும் பாறைகளில் சிக்கித் தவிக்கும் 200 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் பாறைகளில் ஏறி நின்றனர். ஆனால், அவர்களில் 8 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்பட்டுள்ள ஆற்றின் மறுபுறத்தில் சதுரகிரிக்குச் சென்ற 500 பக்தர்கள் சிக்கியுள்ளனர். வெள்ளம் குறையும் வரை அவர்கள் திரும்ப முயற்சிக்க வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.