நிர்மலா தேவி வழக்கில் 31 பேரிடம் ரகசிய விசாரணை நடத்தப்படும்- ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்தூர்: நிர்மலா தேவி வழக்கில் 31 பேரிடம் ரகசிய விசாரணை நடத்தப்படும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்மலா தேவி சிபிசிஐடி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். முருகன், கருப்பசாமி குறித்து இவர் வெளியிட்ட வாக்குமூலங்கள் கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்தக்கூடாது. ரகசியமாக விசாரணை நடத்த வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கருப்பசாமி, முருகன் தரப்பில் வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என மனு செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி லியாகத் அலி முன்பு இன்றும் நடைபெற்றது. அப்போது நீதிபதி கூறுகையில் நிர்மலா தேவி வழக்கில் 31 சாட்சிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்படும்.
மேலும் 114 பேரிடம் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். நிர்மலா தேவி வழக்கு விசாரணை நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.