நிர்மலா தேவி வழக்கு: ஆதாரமே இல்லை! முருகன், கருப்பசாமியை விடுதலை செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: நிர்மலா தேவி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கடந்த 26ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. அவர் கோர்ட்டுக்கு வந்து கொண்டிருந்த போது மயக்கம் ஏற்பட்டதால் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை என அவருடைய வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையேற்ற நீதிபதி பகவதி அம்மாள், தீர்ப்பை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படவிருப்பதால் நிர்மலா தேவி கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பின்னணி என்ன: அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத் துறையில் பேராசிரியையாக இருந்து வந்தவர் நிர்மலா தேவி. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் பாடம் எடுத்து வந்தார். இவருக்கு அந்த பல்கலைக்கழகத்தில் அதிக செல்வாக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
தேவாங்கர் கல்லூரியில் ஏழ்மை நிலையில் இருந்த மாணவிகளை நிர்மலா தேவி தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி முக்கிய புள்ளிகளுக்கு விருந்தாக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது ஒரு மாணவியை சமாதானம் செய்ய நிர்மலா தேவி பேசிய ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த ஆடியோ கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியையே இப்படி அவர்களை பாழும் கிணற்றில் தள்ளிவிட முயற்சிப்பதா என தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. நிர்மலா தேவியிடம் விசாரணைக்கு சென்ற போது அவர் தனது வீட்டுக்குள் பூட்டிக் கொண்டு போலீஸாருக்கு ஆட்டம் காட்டினார்.
நிர்மலா தேவியிடம் விசாரணை: பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்த நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.
வழக்கில் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகனும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேர் மட்டுமே குற்றவாளிகள் என இறுதி செய்யப்பட்டது.
சிபிசிஐடிக்கு மாற்றம்: கடந்த 2018ஆம் ஆண்டு இந்த வழக்கில் 1,160 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மேற்கண்ட மூவருக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது.
கொரோனா ஊரடங்கால் வழக்கு விசாரணை தாமதமானது. பேராசிரியர் நிர்மலா தேவிக்கான வழக்கறிஞர்கள் அடிக்கடி விலகிச் சென்றதால் அரசே அவருக்கு வேண்டிய வழக்கறிஞரை நியமித்துள்ளது. கடந்த 4ஆம் தேதி இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 26ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நிர்மலா தேவிக்கு எந்த மாதிரியான தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த வழக்கில் முருகன், கருப்பசாமி ஆகியோர் நேற்றைய தினம் ஆஜராகினர். ஆனால் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. இதனால் அவர் தலைமறைவாகிவிட்டாரா என்ற உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின.

நிர்மலா தேவிக்கு மயக்கம்: இந்த நிலையில் நிர்மலா தேவியை 29ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அன்றைய தினம் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாகவும் நீதிபதி பகவதி அம்மாள் தெரிவித்தார். இந்த நிலையில் இதுகுறித்து நிர்மலா தேவியின் வழக்கறிஞர் கூறுகையில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்மலா தேவி பேருந்தில் வந்த போது உடல்நலக் கோளாறு காரணமாக மயங்கி விழுந்தார்.
கோர்ட்டுக்கு வராதது ஏன்: இதனால்தான் அவர் கோர்ட்டுக்கு வரவில்லை. இதை நீதிமன்றத்தில் மனுவாகவே தாக்கல் செய்துவிட்டோம். அதை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார் என தெரிவித்தார். இந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்பதால் காலையிலேயே நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்துவிட்டனர்.
இருவர் விடுதலை: அப்போது நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பை வாசித்தார். அவர் கூறியிருப்பதாவது: மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக, முருகன், கருப்புசாமி ஆகியோருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் ஏதும் இல்லை. எனவே அவர்கள் இருவரையும் இந்த கோர்ட் விடுதலை செய்கிறது என தனது தீர்ப்பில் பகவதி அம்மாள் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications