கமிஷனர் அலுவலகத்தில் குவிந்த பச்சமுத்து ஆதரவாளர்கள்.. போலீஸைத் தாக்கிய ஒருவர் கைது
சென்னை: எஸ்.ஆர்.எம் கல்லூரி நிறுவன தலைவர் பச்சமுத்துவை கைது செய்தபோது போலீசை தாக்கியதாக அவரது ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
எஸ்.ஆர்.எம்., குழு தலைவரும், ஐ.ஜே.கே., கட்சி தலைவருமான பச்சமுத்துவை இன்று சென்னை குற்றப்ப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வேந்தர் மூவிஸ் மதன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காசியில் ஜலசமாதியாகப் போவதாக கடிதம் எழுதிவிட்டு மாயமானார். இவரை கண்டு பிடித்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம்பெற்றுத் தருவதாகக் கூறித் தங்களிடம் மதன் பணம் பெற்றதாக 102 பேர் காவல்துறையில் புகார் அளித்தனர். ரூ.72.50 கோடி வாங்கிக் கொண்டு தலைமறைவான மதனைக் கண்டுபிடிக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த புகாரின் பேரில் இந்திய ஜனநாயகக் கட்சி மாநில மருத்துவர் அணிச் செயலாளர் பார்க்கவன் பச்சமுத்து, மதுரை மாவட்டச் செயலாளர் சண்முகம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பாபு, மதனின் நண்பர் விஜயபாண்டியன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாயமான மதன் எங்கிருக்கிறார்? என்ன ஆனார்? என்பதை 3 மாதங்களாகியும் கண்டுபிடிக்க முடியாததால் காவல்துறைக்கு நெருக்கடி அதிகரித்தது. இந்த வழக்கில் எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் விசாரிக்கவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகளும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் நேற்று மாலை தொடங்கி இரவு சுமார் 11 மணி வரை விசாரணை நடத்தினர். இரவு முழுவதும் குற்றப்பிரிவு அலுவலகத்திலேயே பச்சமுத்து தங்க வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் விசாரணையை போலீசார் தொடங்கினர்.
மதன் மாயமானது தொடர்பாகவும், எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித்தர பணம் பெற்றது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று காலையில் பச்சமுத்துவை போலீசார் கைது செய்தனர். நம்பிக்கை மோசடி செய்ததாக இவர் மீது ஜாமினில் வெளி வர முடியாத வழக்கு பதியப்பட்டுள்ளது.
பச்சமுத்துவை விசாரணை செய்த போது அவரது ஆதரவாளர்கள் பலர் குவிந்ததால் பழைய கமிஷனர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பச்சமுத்துவின் ஆதரவாளர்கள் சிலர் போலீசை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பச்சமுத்துவின் ஆதரவாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications