பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம் : இறுதிகட்ட தயாரிப்பில் மாணவர்கள் மும்முரம்
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நாளை தொடங்கவுள்ளதால் மாணவர்கள் இறுதிகட்டத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி : பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நாளை முதல் தொடங்க உள்ளது. இதனால் மாணவர்கள் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நாளை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இதைத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12,337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 83 ஆயிரத்து 120 பேர். மாணவிகள் 4 லட்சத்து 81 ஆயிரத்து 371 பேர்.

இதற்காக தமிழகம் முழுவதும் மூன்றாயிரத்திற்கும் அதிகமான தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தத் தேர்வை மாவட்டம் முழுவதும் உள்ள 86 அரசு பள்ளிக்கூடங்கள் உள்பட 296 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 23 ஆயிரத்து 624 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.
தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 904 பேரும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 729 பேரும் தேர்வு எழுதுகின்றனர். இதில் மாற்றுத்திறனாளிகள் 63 பேரும் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 61 தேர்வு மையங்கள், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள் என மொத்தம் 95 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்வைக் கண்காணிக்க 95 முதன்மை கண்காணிப்பாளர்கள், 5 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 95 துறை அலுவலர்கள், 10 கூடுதல் துறை அலுவலர்கள், 190 பறக்கும்படை உறுப்பினர்கள், 1,333 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு மையங்களில் அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன
இந்த தேர்வை சிறப்பாக எழுத வேண்டும் என்ற முனைப்புடன் மாணவ, மாணவிகள் கடைசி கட்ட தயாரிப்பில் மும்முரம் காட்டி வருகின்றனர். மேலும் இரவு பகலாக படிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications