உமா மகேஸ்வரி கொலை - சந்தி சிரிக்கிறது சட்டம் ஒழுங்கு - ஸ்டாலின் கருத்து
சென்னை: உமா மகேஸ்வரி கொலையில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் ஐடி இளம்பெண் கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், ‘'சென்னை புறநகரில் உள்ள ஐ.டி.நிறுவன சாப்ட்வேர் என்ஜீனியரான இளம்பெண் உமாமகேஸ்வரி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தன் மகளைக் காணவில்லை என்று பதறிய தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், அந்தப் பெண்ணின் சடலத்தை பொதுமக்கள்தான் கண்டுபிடித் திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது இதயத்தில் ஈட்டிப் பாய்ச்சுவது போலிருக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடி விட்டார்கள் என்று தம்பட்டம் அடித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் இன்று பத்திரிக்கைகளை புரட்டினால் கொலை, கொள்ளைகளைப் போடுவதற்கே பக்கங்கள் போதாது போலிருக்கிறது. அந்த அளவிற்கு சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய காவல்துறை துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் தூங்கி வழிந்து கொண்டிருக்கிறது. எவ்வளவோ அதிநவீன கருவிகள் வந்த பிறகும், தமிழக காவல்துறை அ.தி.மு.க. ஆட்சியில் கற்காலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்த விஷயத்தில் கூட உமா மகேஸ்வரி சடலம் மீட்கப்பட்ட பிறகு ஆளில்லா விமானம் மூலம் எல்லாம் தேடுதல் வேட்டையாடும் காவல்துறை, புகார் கொடுத்தவுடன் அவரை தேட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு விளக்கம் ஏதுமில்லை. அப்படி ஒருவேளை உடனடியாக தேடியிருந்தால், அந்த இளம் பெண்ணை காப்பாற்றியிருக்கலாம். ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகள் வெளியே போனால் திரும்பி வரும் வரை தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பீதியில் வாழும் சூழல்தான் இன்று நிலவுகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கருத்து:
திமுக சட்டமன்ற உறுப்பினரும்,தென் சென்னை மாவட்ட செயலாளருமான அன்பழகன் தனது டுவிட்டர் பக்கத்தில்,"மக்கள் தெரிவிக்கும் கருத்து எனக்கு சட்டமன்றத்தில் இந்த பிரச்சனை பற்றி விவாதிக்க உதவி புரியும்.மேலும்,இந்த சம்பவத்திற்கு பின்பாவது தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பிற்காக என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.