குற்றச்சாட்டுகள் மூலம் சுயவிளம்பரம் தேடுகிறார் வைகோ: ஸ்டாலின்
சென்னை: மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ குற்றச்சாட்டுகள் மூலம் சுயவிளம்பரம் தேடுவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 2ஜி ஸ்பெக்டரம் பின்னணியில் இருந்தது மு.க. ஸ்டாலின்தான். இதை கூறியதற்காக என் மீது மற்றொரு வழக்குப் போடட்டும். அதையும் சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி பலிகடாவாக்கப்பட்டுள்ளார். கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கருணாநிதி குடும்பத்தினர் திரைமறைவில் பதுங்கிக் கொண்டனர். சாகித்பால்வா சென்னை வந்து ஸ்டாலினைச் சந்தித்தபோது, என்ன பரிமாற்றம் நடந்தது. கோடிக்கணக்கில் வழங்கப்பட்ட டி.டி. யாரிடம் கொடுக்கப்பட்டது.
சாகித் பால்வா- ஸ்டாலின் சந்திப்பை சிபிஐயிடம் சொன்ன பெரம்பலூர் சாதிக்பாட்ஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார் என்று வைகோ குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், தன்னுடைய விளம்பரத்திற்காக வைகோ உளறிக் கொண்டிருக்கிறார் என்றார்.
வைகோவின் உளறலுக்கெல்லாம் அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். அதில் வந்து அவர் சொல்லட்டும் என்றார்.
அதேபோல், தமிழக முதல்வரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா என்ன பதிலை சொல்லப் போகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், மத்திய அமைச்சர் சொல்லியிருக்கும் வெளிப்படையான குற்றச்சாட்டுக்கு தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால் முதல்வராக இருக்கக்கூடிய ஜெயலலிதா அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். அதைத்தான் திமுக தலைவர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார் எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications