அறிவாலயத்தில் ஸ்டாலின் நடத்திய ஒத்திகை- டெல்டா மா.செக்களுடன் தீவிர ஆலோசனை
காவிரி பிரச்சனை குறித்து டெல்டா மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக டெல்டா மாவட்ட செயலாளர்களிடம் தீவிரமாக விவாதித்திருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். காவிரி விவகாரத்தில் நமக்குக் கிடைக்க வேண்டிய பெயர், மற்றவர்களுக்குச் சென்று சேருகிறது. இதை மாற்றும் வகையில் அடுத்தகட்ட போராட்டம் அமைய வேண்டும்' எனவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்' என நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மாறாக, வாரியம் என்பதற்குப் பதிலாக ஆணையம் அமைக்குமாறு தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம். ஆணையத்தை அமைத்தால், அது தன்னாட்சி கொண்டதாக இருக்காது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக் கூடியதாகவே அமையும்.
கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றுதான் கூறப்பட்டிருந்தது. அதற்கு கர்நாடக அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, இதற்கு ஒப்புதல்தான் அளித்தது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து மத்திய அரசு நிலைப்பாட்டை மாற்றியது ஏன் என்று விளங்கவில்லை' என அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளார். டெல்டா மாவட்டத்தில் உள்ள பத்து மாவட்ட செயலாளர்களிடமும் விவாதித்தார் ஸ்டாலின்.
விரி தண்ணீர் வராததால் ஏற்பட்ட பாதிப்புகள்? ஜுன் மாதத்துக்குள் வராவிட்டால் என்ன நடக்கும்? உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் கருத்து கேட்டு, குறிப்பெழுதிக் கொண்டார். வாரியம் என்பதற்கும் ஆணையம் என்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் மற்றும் காவிரி தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றியும் விரிவாகக் கேட்டறிந்தார். காவிரி விவகாரத்தில் நம்முடைய பங்கு என்ன? அ.தி.மு.கவின் பங்கு என்ன என்பதைப் பற்றியும் ஜுன் மாதத்துக்குள் காவிரி நீரைக் கொண்டு வருவதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் தெருமுனைக் கூட்டம் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டது. 'காவிரி உரிமையை தி.மு.கதான் போராடிப் பெற்றுக் கொடுத்தது' என்பதை கூட்டம் போட்டுப் பேசினால், நமக்கான பலன் வந்து சேரும். அப்படிச் செய்யாவிட்டால், அதன் பலன் அ.தி.மு.கவுக்குத்தான் போகும்' எனவும் பேசியுள்ளனர். இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்துக்கான ஒத்திகையாகவே டெல்டா மா.செக்களிடம் விவாதித்தாராம் ஸ்டாலின்.