சொந்த துக்கத்துக்கு மத்தியிலும் கேரளாவுக்கு உதவும் ஸ்டாலின்!
கேரள மக்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: மனசு பூராவும் துக்கத்தை வைத்து கொண்டு பிறருக்கு உதவி செய்யும் ஸ்டாலினின் மாண்புதான் தற்போது கேரள மக்களால் பேசப்பட்டு வருகிறது.
திமுக தலைவரை அடக்கம் செய்து 5 நாள்தான் ஆகிறது. அதற்குள் பல்வேறு நற்காரியங்களில் இறங்கிவிட்டார் ஸ்டாலின். கருணாநிதியின் அஞ்சலி நிகழ்ச்சியின்போது கூட்டத்தில் காயமடைந்தோரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் சொன்ன கணமே அவர் தன் பொறுப்புகள், கடமைகளை இருகரம் கூப்பி வரவேற்று செயல்படுத்த துவங்கிவிட்டார். துக்கம் நடந்து மறுநாளே இதை அவர் செய்தது நமக்கு பெரிய விஷயமாக இருந்தது.
வெள்ள நிவாரண நிதி
ஆனால் தற்போது அண்டை மாநில மக்களும் ஸ்டாலினை தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். கேரளா தற்போது அழிவினை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எதிர்காலத்தை இழந்து திக்கற்று கிடக்கிறார்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள். அவர்களின் நிவாரணத்திற்கு பல்வேறு தரப்பு சார்பாகவும், மாநில அரசு ரீதியாகவும், தனிப்பட்ட, மற்றும் திரைப்பிரபலங்கள் மூலமாகவும் கேரள மக்களுக்கு வெள்ளநிதி கிடைத்து வருகிறது.
கேரள மக்கள் வியப்பு
கேரள மக்களின் துயரத்தில், திமுக தலைவர் ஸ்டாலினும் பங்கு கொண்டுள்ளார். பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்காக திமுக அறக்கட்டளை சார்பாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயை ஸ்டாலின் இன்று வழங்கினார். அத்துடன், வெள்ளத்தில் உயிரழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த தெரிவித்தும், மீட்பு பணிகளுக்கு தான் உதவுவேன் என கூறியதை கேட்டும், கேரள மக்கள் புல்லரித்துபோய் உள்ளனர்.
1 கோடி ரூபாய்
இந்த நேரத்தில் ஸ்டாலினின் 1 கோடி ரூபாய் பணம் கேரள மக்களுக்கு பெரிய உதவிதான் என்றாலும், தந்தையை இழந்து தவிக்கும் நேரத்தில் இந்த உதவியை பெரிதாக நினைக்கிறார்கள். இதே உதவியை தன் மாநிலத்துக்கு ஸ்டாலின் செய்துகொண்டால் அது அரசியல் தந்திரம் என்றும், உள்நோக்கம் என்றும் சொல்லப்படும். ஆனால் பக்கத்து மாநிலத்துக்கு செய்வதனால் ஸ்டாலினுக்கு என்ன பயன்? இதைத்தான் அங்குள்ள கேரள மக்கள் யோசித்து பார்க்கின்றனர்.
குவியும் பாராட்டுக்கள்
தங்களுக்காக மனமுவந்து, மனம் நிறைய துக்கத்தை வைத்துகொண்டுள்ள இந்தநேரத்தில், ஸ்டாலினின் இந்த நற்செயலை நினைத்து கேரள மக்கள் நெகிழ்ந்து காணப்படுகின்றனர். மனசார புகழ்ந்து தள்ளுகிறார்கள்.. வாயார வாழ்த்தி வருகின்றனர்...