சட்டக் கல்லூரி போராட்டத்திற்கு ஆதரவு! மாணவர்களுடன் ஸ்டாலின், ஈவிகேஎஸ். தமிழிசை சந்திப்பு!!
சென்னை: நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வரும் சட்டக் கல்லூரி மாணவர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்ய முடிவெடுத்திருப்பதை கண்டித்து அக்கல்லூரி, மாணவ, மாணவிகள் நடத்திய போராட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். எனவே மாணவ, மாணவிகள் கல்லூரியில் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சட்டக் கல்லூரிக்கு ஏழு நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையிலும், 4வது நாளாக மாணவர்கள் இன்றும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனிடையே இந்த பிரச்சினை தற்போது எதிர்க்கட்சிகளின் அரசியல் ஆயுதமாகியுள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சட்டக் கல்லூரி மாணவர்களை போராட்ட இடத்துக்கே சென்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "மாணவ, மாணவிகளை போலீசார் தாக்கியது கண்டனத்துக்குரியது. அவர்கள் அடிப்படை பிரச்சினைக்காகவே போராடினார்கள். கண்மூடித்தனமாக மாணவ, மாணவிகள் தாக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சிகாலங்களில் மாணவர்கள் தாக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. மாணவர்கள் போராட்டத்திற்கு திமுக மாணவர் அணி துணை நிற்கும்.
சட்டக் கல்லூரியை காஞ்சீபுரம் அல்லது திருவள்ளூர் மாவட்டத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாலேயே மாணவர்கள் ஆத்திரமடைந்து போராட்டம் நடத்தினர். எனவே சம்மந்தப்பட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வழி செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களை சந்தித்துப் பேசினார்.
பின்னர், சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யாமல் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்துகிறேன். நீதிமன்றம் அருகே கல்லூரி இருந்தால் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
மாணவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி போராடும். போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்குச் செல்லுமாறு மாணவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
தமிழிசை சவுந்தரராஜன்
மேலும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அத்துடன் போலீசார் தடியடியில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மாணவர்களையும் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்தார்.












Click it and Unblock the Notifications