திமுகவின் வெற்றியை உறுதி செய்தது ஜெயலலிதா: மு.க.ஸ்டாலின்
சென்னை: விளம்பரத்தின் தாக்கத்தை உணர்ந்த ஜெயலலிதா தனது சொந்த தொகுதியிலாவது செல்வாக்கை நிலை நாட்டலாம் என்ற எண்ணத்துடன் இறங்கி வந்திருப்பதே திமுகவின் வெற்றியை உறுதி செய்துள்ளது என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் முகநூலில் பதிவு செய்துள்ளது:
ஆட்சி என்ற பெயரில் 5 ஆண்டு காலமாக ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு நடத்திய காட்சியினையும் அதன் அவலத்தையும் விளம்பரங்கள் வாயிலாகத் தமிழக மக்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டி வருகிறது தி.மு.கழகம். தமிழக மக்களிடம் தி.மு.கவின் இந்த விளம்பரங்கள் சரியாகப் போய்ச் சேர்ந்து, வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தி.மு.கவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இதனை உணர மறுத்தாலும், விளம்பரத்தின் தாக்கத்தை செல்வி.ஜெயலலிதா நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.5 வருஷமா முதல்வரை ஸ்டிக்கரில் பார்த்திருப்பீங்க.. பேனரில் பார்த்திருப்பீங்க.. ஏன் டி.வியில்கூட பார்த்திருப்பீங்க..
ஆனா, நேரிலே பார்த்திருக்கீங்களா? என்ற விளம்பர வாசகம் ஏற்படுத்திய அதிர்வுகளை உணர்ந்துகொண்டதன் விளைவாக, மழை-வெள்ள காலத்திலும் வாட்ஸ்அப் ஆறுதல் மட்டுமே தெரிவித்த ஜெயலலிதா இப்போது தனது ஆர்.கே.நகர் தொகுதிக்கு நேரில் சென்று திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
காணொலி காட்சியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது என்பதையும், ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதையும் உணர்ந்து, சொந்த தொகுதியிலாவது செல்வாக்கை நிலைநாட்டலாம் என்ற எண்ணத்துடன் ஜெயலலிதா இறங்கி வந்திருப்பதே, தி.மு.கழகத்தின் வெற்றியை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. அதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பதிவுசெய்துள்ளார்.












Click it and Unblock the Notifications