மக்கும் குப்பையிலிருந்து மகத்தான தயாரிப்பு! தமிழக அரசின் ''செழிப்பு'' இயற்கை உரம் அறிமுகம்!
சென்னை: தமிழக அரசின் ''செழிப்பு'' இயற்கை உரத்தை அறிமுகம் செய்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் அதன் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
நகர்ப்புரங்களில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் நுண்ணுரக் கூடங்கள் மூலம் இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.
தரமான இயற்கை உரத்தை நுகர்வோருக்கு அளிக்கும் பொருட்டு, உரத்தின் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து பகுப்பாய்வு செய்யப்படுகிறது.
இவ்வாறு பகுப்பாய்வு செய்யப்பட்ட இயற்கை உரத்தினை "செழிப்பு" என்ற பெயரில் தரக்குறியீடு நிர்ணயம் செய்து அனைத்து நகரங்களிலும் விற்பனை செய்து வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஈரக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்திற்கு "செழிப்பு" என பெயரிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் விற்பனைக்காக அறிமுகப்படுத்தினார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புர உள்ளாட்சிகளிலும் சுமார் 15,000 டன் குப்பை நாளொன்றுக்கு சேகரம் ஆகிறது. இதில் சுமார் 55 சதவீதம் மக்கும் குப்பையாகும். மக்கும் குப்பையிலிருந்து சுமார் 15 சதவீதம் உரமாக பெறப்படுகிறது.
மாநகராட்சிகளில் 629 இடங்களில், நகராட்சிகளில் 334 இடங்களில் மற்றும் பேரூராட்சிகளில் 489 இடங்களிலும் உள்ள நுண் உர மையங்கள் மற்றும் காற்றாடல் மையங்களில் மக்கும் குப்பை அறிவியல் முறையில் செயலாக்கம் செய்யப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.
இவற்றில் நாள் ஒன்றுக்கு சுமார் 870 மெ.டன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.
இந்த உரம் பயன்படுத்தும் பொழுது மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீரை தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மை மேம்படுத்தப்படுவதோடு, மண்ணில் இடப்படும் இரசாயன உரத்திலிருந்து சத்துக்களை விடுவிக்கும் தன்மை மற்றும் அதனை பயிர் ஏற்று கொள்ளும் வடிவில் சத்துக்களை மாற்றும் தன்மையும் ஏற்படும்.












Click it and Unblock the Notifications