கே.என். நேருவை கண்ணீர் விட்டு அழ வைத்த மு.க.ஸ்டாலின்!
ஸ்டாலின் பேசுகையில்,
இந்த மாநாட்டை கே.என்.நேரு மிகச் சிறப்பாக நடத்தி கொடுத்திருக்கிறார். நிறைவாக கலைஞர் அவர்கள் மனம் திறந்து பாராட்டுவார். அந்த பாராட்டுக்கு ஈடு இணை எதுவும் அமைந்திடப்போவதில்லை. இருந்தாலும் கழகத்தின் பொருளாளராக இருக்கிற காரணத்தால், அவருக்கு என்னுடைய பாராட்டை, நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஆட்சி மாற்றம் நடந்த இந்த மூன்று ஆண்டு காலத்தில் திமுகவினர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. பல கொடுமைகள் நடந்தன. இங்கே மேடையில் அமர்ந்திருக்கக் கூடிய முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்.
யாருக்கும் ஏற்படாத அந்த கொடுமை, வழக்குகளை கூட்டிப் பார்த்தால் கே.என்.நேரு மீது தான் அதிக வழக்குகள். எல்லாவற்றிலும் சாதனை படைத்திருக்கக் கூடிய கே.என்.நேரு, வழக்குகளிலும் சாதனை படைத்திருக்கிறார். அதுதான் அவருக்கு இருக்கக் கூடிய பெருமை. எத்தனை வழக்குகள். கைது செய்வார்கள். சிறையில் கொண்டுபோய் தள்ளுவார்கள். அதற்குப் பிறகு ஜாமீன் பெற்று வெளியே வருவார். வருகிறபோதே வாசலில் மடக்கி மீண்டும் ஒரு வழக்கை பதிவு செய்து, மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அதற்கு பிறகு மீண்டும் ஜாமீன் பெற்று வந்தால், மீண்டும் வழக்கு, கைது, சிறை.
அவ்வளவு வழக்குகளை சந்தித்தது மட்டுமல்ல. இன்னும் வேதனையோடு சொல்லுகிறேன். நேருவின் உடன் பிறந்த சகோதரர் இன்றைக்கு கொடி மேடையில் பெயரால் தாங்கியிருக்கிறாரே நம்முடைய அருமை சகோதரர் ராமஜெயம் அவர்கள், அண்ணன் நடத்தக் கூடிய இந்த மாநாட்டை, நேரு நடத்தக் கூடிய இந்த மாநாட்டை பக்கத்தில் இருந்து, துணைக்கு நின்று பணியாற்ற அந்த இளைஞன் இல்லையே என்று அந்த ஏக்கம் அவருக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் நிரம்ப உண்டு.
ஆக அந்த இழப்பையும் தாங்கிக்கொண்டு இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்திக்கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அவருக்கு உங்களுடைய அனைவரின் சார்பாகவும் என்னுடைய நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்
ஸ்டாலின் பேசப் பேச நேரு கண்ணீர் விட்டுத் தேம்பித் தேம்பி அழுதார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரைத் தேற்றிப் பார்த்தனர். ஆனால் முடியவில்லை. நேருவின் கண்ணீர் நிற்கவில்லை. ஸ்டாலின் பேசி முடித்த பிறகு நேரு கண்ணீரோடு எழுந்து நின்று நன்றி சொன்னார். அப்போது ஸ்டாலினும் நேருவிடம் வந்து ஆறுதல் கூறி தட்டிக் கொடுத்தார்.