"மாப்பிள்ளை அவருதான்.. ஆனா அவர் போட்டிருக்கும் சட்டை என்னோடது”.. அமித் ஷாவை சாடிய ஸ்டாலின்!
சேலம்: "மாப்பிள்ளை அவருதான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது!" என்பது போல, ஒன்றிய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கும், மாநில அரசான நாம் நிதி அளித்து வருகிறோம். இந்த நிலையில், எந்த அடிப்படையில், தமிழ்நாடு அரசை விமர்சிக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா?" என்று விமர்சித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப் பயணமாக சேலம் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தார். அவருக்கு ஈரோடு - சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார்.

சேலத்தில் ஸ்டாலின்
பின்னர், மேட்டூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று இரவு மேட்டூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கினார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். தண்ணீரை திறந்த பிறகு மு.க.ஸ்டாலின் காவிரி ஆற்றில் பூக்களை தூவினார். 8 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெள்ளமெனப் பாய்ந்தது.
இதனைத்தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலத்திற்கு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், சேலம் இரும்பாலை பகுதியில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். கட்டி முடிக்கப்பட்ட திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரை ஆற்றினார்.
ஸ்டாலின் பேச்சு - படையப்பா டயலாக்
இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பிரதமர் பேரில் இருக்கக்கூடிய திட்டங்களுக்கு மாநில அரசு தான் 50% நிதி தருகிறது. மத்திய அரசு திட்டங்களுக்கும் மாநில அரசு நிதி கொடுத்து வருகிறது. நீங்கள் எல்லோரும் படையப்பா படத்தை பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு காட்சி வரும். மாப்பிள்ளை அவர் தான்; சட்டை என்னுடையது என ஒரு டயலாக் வரும்.
மத்திய அரசு திட்டங்களுக்கும் மாநில அரசு நிதி கொடுத்து வருகிறது. இப்படி இருக்கும்போது நாம் நிதியை மடைமாற்றுவதாக எந்த அடிப்படையில் அமித்ஷா குற்றம்சாட்டுகிறார்? மத்திய அரசு தான் தமிழ்நாட்டுக்கான திட்டங்களுக்கு உரிய நிதியை தருவதில்லை. ஆனால், உள்துறை அமைச்சர் அமித் ஷா பிளேட்டை திருப்பிப் போடுகிறார்" என்று விமர்சித்துள்ளார்.
அதென்ன விண்வெளி நிலையமா?
மேலும் பேசிய ஸ்டாலின், "மத்திய அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன நிலையில் உள்ளது? திமுக ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், உலக தரத்திலான ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் உள்ளிட்ட ஏராளமான பணிகளை திமுக ஆட்சி முடிந்துள்ளது. இதுதான் பாஜக மாடலுக்கும் திமுக மாடலுக்கு உள்ள உள்ள வித்தியாசம்.
கடந்த 10 ஆண்டுகளாக கட்டுவதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா? முறையாக நிதி ஒதுக்கி இருந்தால் இரண்டே ஆண்டுகளில் கட்டி இருக்கலாம். மூன்றாவது முறையாக மத்திய அரசு ஆட்சி அமைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு என்று செய்த ஒரு சிறப்பு திட்டத்தையாவது மத்திய அரசு கூறட்ட்டும் பார்க்கலாம். ஒன்பது ஆண்டுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக இடம் பெற்றிருந்தது. அதன் சாதனைகள் எல்லாம் சட்டமன்றத்தில் பட்டியலிட்டு கூறியுள்ளேன்.
நெஞ்சை நிமிர்த்தி
மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்கள்? சொன்னால் செய்து காட்டும் ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் திமுக ஆட்சியில் பயன் பெற்றவர்களின் புள்ளி விவரங்களை நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்." எனக் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications