ஓபிஎஸ் வரும் முன் தலைமைச் செயலகம் வந்த ஸ்டாலின்..... முதல்வரை சந்திக்கவில்லை
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தலைமைச் செயலகம் வந்த நிலையில் அதற்கு முன்னதாக மு.க.ஸ்டாலின் வந்து காத்திருந்தார். ஆனால் முதல்வரை சந்திக்காமலேயே கிளம்பினார்.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்திற்கு இன்று திடீரென வருகை தந்தார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச்செயலகம் வரும் முன்பே ஸ்டாலினும் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடன் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோரும் தலைமைச் செயலகம் வந்தனர். எதிர்கட்சித்தலைவர் அறையில் அமர்ந்து ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமைச் செயலகத்திற்கு பத்து நாட்கள் கழித்து வந்தார். அதற்கு முன்னதாக இன்று காலையிலேயே கிரீன்வேஸ் சாலையில் தனது ஆதரவாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றார்.

கோவிலில் இருந்து வந்திருந்த சிலர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பிரசாதங்களை அளித்தனர். அவற்றை பெற்றுக்கொண்டார். இதனையடுத்து அவர் தலைமைச் செயலகத்திற்கு கிளம்பினார் ஓ.பன்னீர் செல்வம். வழியெங்கும் மக்கள் வரவேற்பு அளித்தனர். இதனை பெற்றுக்கொண்ட ஓபிஎஸ் தலைமைச் செயலகத்திற்கு இன்று வந்தார்.
எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறையில் வந்து துரைமுருகன் பொன்முடியுடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்கட்சித்தலைவரும் திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் முதல்வரின் வாகனம் தலைமைச் செயலகத்தில் நுழைந்த சில நிமிடங்களில் மு.க.ஸ்டாலின் கிளம்பிச் சென்றார்.
இன்று மாலையில் திமுக உயர்மட்ட செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகம் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications