போராட்டத்தை கைவிடுங்கள்... டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் வரும் 25ம்தேதி நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வாழ்வாதாரமின்றி தவிக்கும் விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏப்ரல் 25ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த முழுஅடைப்பு போராட்டம் குறித்து அனைத்துக் கட்சியினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மீண்டும் கூடி ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், காங்கிரஸின் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தங்களது கோரிக்கைகள் நிறைவேற வலியுறுத்தி டெல்லியில் 40 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டு, அனைத்து கட்சி சார்பில் விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தீர்மான நகல், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.