மதுரையில் ஆகஸ்ட் 1-ல் பொதுக்கூட்டம்: ஸ்டாலினை வெறுப்பேற்ற வியூகம் வகுக்கும் மு.க. அழகிரி
சென்னை: மதுரையில் ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். ஸ்டாலின் கலந்து கொள்ளும் இக்கூட்டத்துக்கு முக்கியத்துவம் கிடைக்காமல் இருப்பதற்கான பரபரப்பான வியூகங்களை தொடங்கியிருக்கிறார் மு.க. அழகிரி.
லோக்சபா தேர்தலின் போது கலகக் குரல் எழுப்பியதற்காக மு.க. ஸ்டாலின் திமுகவை விட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தேர்தலுக்குப் பின்னர் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் முல்லைவேந்தன், கே.பி. ராமலிங்கம் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பின்னர் முல்லைவேந்தன் திமுகவில் இருந்து அண்மையில் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

சட்டசபையில் சஸ்பென்ட்
இதனிடையே தமிழக சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு கூட்டத் தொடர் முழுவதற்கும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து "தமிழக சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில் தமிழக அரசுக்கு எதிரான கூட்டங்களை நடத்த தி.மு.க. முடிவு செய்துள்ளது.

சென்னையில் கருணாநிதி
தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்கும் பொதுக்கூட்டம் வரும் 31ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

மதுரையில் ஸ்டாலின்
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஆகஸ்ட் 1ந் தேதி, மதுரையில் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டாலின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தென்மாவட்ட தொண்டர்கள்
தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலிருந்து மதுரைக்கு தொண்டர்களை அழைத்து வருவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

முல்லைவேந்தனும் மதுரை வருகை?
அதே நாளில் மு.க.ஸ்டாலினை வெறுப்பேற்றுகிற வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள மு.க. அழகிரியும் திட்டமிட்டிருக்கிறாராம். ஸ்டாலின் மதுரையில் இருக்கும் நாளில் முல்லைவேந்தனும் மதுரை வந்து மு.க. அழகிரியை சந்திக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

தொண்டர்கள் வீடுகளுக்கு அழகிரி
மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் திமுக அதிருப்தி நிர்வாகிகள் சிலரது இல்லத்துக்கு செல்லவும் அழகிரி முடிவு செய்துள்ளாராம்.
ஆக, ஆகஸ்ட் 1-ந் தேதி மதுரையில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது!












Click it and Unblock the Notifications