ஜெ. தீர்ப்பு: நாட்டு மக்களே ஒரு முடிவுக்கு வரட்டும்.. மு.க.ஸ்டாலின்
சென்னை: ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு பற்றி நாட்டு மக்களே அவர்களுடைய சொந்த தீர்மானத்திற்கு வர முடியும். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தமட்டில் இந்த தீர்ப்பு பற்றி கவலைப்படாமல் வலுவான தமிழகத்தை உருவாக்கவும், ஊழல் மற்றும் அடக்குமுறை நிறைந்த அரசாகத் திகழும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும் எங்கள் பணி தொடரும். அந்தப் பணிக்கு ஆதரவாக தமிழக மக்கள் எங்கள் பின்னால் உறுதியுடன் நிற்கிறார்கள் என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ள கருத்து:

"நீதிமன்றங்களுக்கு எல்லாம் உயர்ந்த நீதிமன்றம் ஒன்று இருக்கிறது. அதுதான் மனச்சாட்சி என்ற நீதிமன்றம்- மகாத்மா காந்தி"
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு மேல்முறையீடு விசாரணை நடைமுறையின் படியான நீதிமன்ற நடவடிக்கை. இந்த வழக்கினை திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பினரும் போல் ஆர்வத்துடன் கவனித்து வந்தது.
18 வருடங்கள் நடைபெற்ற வழக்கில் வழங்கப்பட்ட 1136 பக்க தீர்ப்பை தள்ளுபடி செய்வதற்கு மூன்று மாத காலம் ஆகியிருக்கிறது. இதற்கு முன்பு எந்த வழக்கிலும் காட்டாத அளவிற்கு இந்த மேல்முறையீட்டு மனுவில் அவசரம் காட்டப்பட்டு, விரைந்து விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு கேலிக்கூத்தாக மாறிவிடக்கூடாது என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் ஒவ்வொரு கட்டத்திலும் தலையிட்டு நீதியை நிலைநாட்ட முயற்சி செய்தது. வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீட்டின் போது தங்கள் தரப்பு வாதங்களை முன் வைப்பதற்கு இரு மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மீதான வழக்கை நிரூபிக்க வேண்டிய அரசு தரப்புக்கு ஒரேயொரு நாள் கால அவகாசம் மட்டுமே கொடுக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், இந்த தீர்ப்பு பற்றி நாட்டு மக்களே அவர்களுடைய சொந்த தீர்மானத்திற்கு வர முடியும். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தமட்டில் இந்த தீர்ப்பு பற்றி கவலைப்படாமல் வலுவான தமிழகத்தை உருவாக்கவும், ஊழல் மற்றும் அடக்குமுறை நிறைந்த அரசாகத் திகழும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும் எங்கள் பணி தொடரும். அந்தப் பணிக்கு ஆதரவாக தமிழக மக்கள் எங்கள் பின்னால் உறுதியுடன் நிற்கிறார்கள் என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications