தடுமாறும் விஜய்-யின் தவெக.. பெருசா பிளான் போடும் திமுக.. ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!
சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான பிறகு தமிழ்நாடு அரசியல் களம் முழுவதும் பெரும் பரபரப்புடனே நிலவி வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பல அரசியல் ராஜதந்திர வேலைகள் தினமும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அக்கட்சியினருக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக கட்சி கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

சென்னையை விட்டு நகர கூடாது..
கட்சியினர் அனைவரும் சென்னையை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கி இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெளிவாக உத்தரவிட்டுள்ளார். அரசியல் சூழல் மாறியுள்ளது. அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும் என்று ஸ்டாலின் இக்கூட்டத்தில் கூறியுள்ளார்.
இந்த உத்தரவு தற்போதைய அரசியல் நிலைமையின் தீவிரத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ஒருப்பக்கம் அதிமுக தலைவர்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ள வேளையில், எடப்பாடி பழனிசாமி நாளை அவர்களை சந்திக்க உள்ளார். மேலும் திமுக கட்சியினர் சென்னையில் தங்கியிருந்தால், தேவைப்படும் நேரத்தில் உடனடியாக ஆலோசனைகள் நடத்தி முடிவுகளை எடுக்க முடியும் என்பது ஸ்டாலின் திட்டம்.
ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்
கூட்டத்தில் மற்றொரு முக்கிய முடிவாக, அரசியல் மற்றும் நிர்வாகச் சூழலை ஆய்வு செய்து "நிலையான ஆட்சி" அமைப்பதற்கான முழு அதிகாரம் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றொரு தேர்தலுக்கு தயாராக இல்லை என்றும், மாநிலத்தில் நிலையான அரசு அமைய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிரான சக்திகள் வளர்வதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
காங்கிரஸ் மீது கடும் கண்டனம்
கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கப்பட்டது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியதை "பழைய அரசியல் குணத்தை மாற்றாத செயல்" என்று விமர்சித்தது. கூட்டணியின் கடுமையான உழைப்பால் பெறப்பட்ட வெற்றியை காங்கிரஸ் ஆபத்தில் தள்ளியதாகவும், ஒரு ராஜ்யசபா இடம் மற்றும் 28 சட்டமன்ற தொகுதிகளை பெற்ற பிறகு மாற்று கூட்டணிக்கு சென்றதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.
தவெக ஆட்சியை 6 மாதம் கண்காணிப்பு
தவெக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி ஆட்சியமைக்கும் முயற்சியில் திமுக எந்த இடையூறும் செய்யாது என்று ஸ்டாலின் இன்று காலையிலேயே தெரிவித்தார். "6 மாதங்கள் கவனிப்போம்" என்று அவர் கூறியது, தவெகவின் ஆட்சி நிலையானதா என்பதை கண்காணிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த அறிவிப்பு தவெகவுக்கு சற்று நிம்மதியை அளித்தாலும், அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களை உருவாக்கியுள்ளது.
தவெகவின் முக்கிய குற்றச்சாட்டு
இதற்கிடையே தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் கே.ஜி. அருண்ராஜ், தவெகவை ஆட்சியமைக்க தடை செய்ய திமுக மற்றும் அதிமுக ரகசியமாக இணைந்து செயல்பட முயற்சிப்பதாக வெளிப்படையாக செய்தியாளர்கள் முன்னிலையில் குற்றம் சாட்டியுள்ளார்.
108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை ஆளுநர் உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "இந்தத் துரோகத்திற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக அரசியல் தற்போது மிகுந்த பதற்றத்துடன் உள்ளது. தொங்கு சட்டமன்ற சூழல், கூட்டணி மாற்றங்கள், ஆளுநரின் நிலைப்பாடு ஆகியவை அடுத்த சில நாட்களில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.















Click it and Unblock the Notifications